web log free
April 26, 2024

முன்னாள் பாதுகாப்பு செயலாளருக்கு விளக்கமறியல்

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோவை நாளைய தினம் வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு பிரதான நீதவான் லங்கா ஜயரத்ன இந்த உத்தரவை இன்று மாலை பிறப்பித்துள்ளார்.

முன்னதாக, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ குற்றப் புலனாய்வு பிரிவினரால் இன்று கைது செய்யப்பட்டார்.

இன்றைய தினம் குற்றப்புலனாய்வு பிரிவில் முன்னிலையாகி வாக்குமூலம் அளிக்குமாறு அவருக்கு முன்னதாக அறிவுறுத்தல் விடுக்கப்பட்டிருந்தது.

எனினும், வயிற்றில் ஏற்பட்டதாக கூறப்படும் வலி காரணமாக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இந்த நிலையிலேயே குற்றப்புலனாய்வு பிரிவு அதிகாரிகளால் அவர் வைத்தியசாலையில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இதேவேளை, கட்டாய விடுமுறை வழங்கப்பட்டுள்ள பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவும் குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர, நாரஹேன்பிட்டவில் உள்ள பொலிஸ் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தினத்தில் இடம்பெற்ற தாக்குதல் தொடர்பில், தகவல்கள் அறிந்தும் அது ​தொடர்பில், உரிய நடவடிக்கை எடுக்காமைக் குறித்து, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் மற்றும் பொலிஸ் மா அதிபர மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.