அரசு ஊழியர்களுக்கு ‘லீசிங்’ முறையில் அரிசி வழங்கப்படவுள்ளதாக எதிர்க்கட்சியும் சில ஊடகங்களும் பரப்பும் தகவல்கள் உண்மையற்றவை என்றும், அரசின் உண்மையான நோக்கம் நெல் களஞ்சியங்களை காலி செய்து, அடுத்த அறுவடைக்காக விவசாயிகளுக்கு நியாயமான விலையை உறுதி செய்வதே என்றும் வர்த்தகம், வாணிபம், உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
ஊடக சந்திப்பில் பேசிய அமைச்சர், 2025 ஆம் ஆண்டு இலங்கையின் மொத்த நெல் உற்பத்தி 5.03 மில்லியன் மெட்ரிக் டன்களாக இருந்ததாகவும், அது அரிசியாக மாற்றப்படும் போது சுமார் 3.2 மில்லியன் மெட்ரிக் டன் அரிசி கிடைக்கும் என்றும் கூறினார். நாட்டின் ஆண்டு அரிசி நுகர்வு சுமார் 2.4 மில்லியன் மெட்ரிக் டன்களாக இருப்பதால், தற்போது சுமார் 800,000 மெட்ரிக் டன் அரிசி உபரியாக இருப்பதாகவும் அவர் விளக்கினார்.
கடந்த காலத்தில் கீரி சம்பா உற்பத்தி 6 சதவீதமாகக் குறைந்ததை பயன்படுத்தி அரிசி ஆலை உரிமையாளர்கள் ஒரு கிலோ கீரி சம்பா அரிசியின் விலையை 400 ரூபாய் வரை உயர்த்தியதாக அமைச்சர் நினைவூட்டினார். இதற்கு தீர்வாக அரசு தலையிட்டு ‘கீரி பொன்னி’ மற்றும் ‘GR11’ போன்ற மாற்று அரிசி வகைகளை சந்தைக்கு அறிமுகப்படுத்தியதன் மூலம் அந்த விலையை 230 முதல் 255 ரூபாய் வரை குறைக்க முடிந்ததாகவும் அவர் தெரிவித்தார்.
“தற்போது எங்களுக்கு உள்ள முக்கிய சிக்கல், அடுத்த யால் பருவ அறுவடையை கொள்முதல் செய்ய களஞ்சியங்களில் போதிய இடம் இல்லாததே. அதனால், நெல் சந்தைப்படுத்தல் சபையின் வசமுள்ள 120,000 மெட்ரிக் டன் நெல்லில் பாதியை டெண்டர் மூலம் அரிசியாக மாற்றி, சதொச மற்றும் கூட்டுறவு விற்பனை நிலையங்கள் வழியாக மக்களுக்கு வழங்க முடிவு செய்துள்ளோம். இது ‘லீசிங்’ திட்டமல்ல; களஞ்சியங்களை காலி செய்து புதிய அறுவடையை கொள்முதல் செய்வதற்கான முன்னேற்பாடாகும்,” என்று அமைச்சர் கூறினார்.
யால் பருவ அறுவடை தற்போது ஆரம்பமாகியுள்ளதால், விவசாயிகள் பாதிக்கப்படாத வகையில் அரசு தலையிடும் என்றும் அவர் வலியுறுத்தினார். அதன்படி, ஒரு கிலோ நாடு நெல்லை 120 ரூபாய்க்கும், சம்பா நெல்லை 130 ரூபாய்க்கும், கீரி சம்பா நெல்லை 140 ரூபாய்க்கும் கொள்முதல் செய்ய அரசு நிதி ஒதுக்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
அரிசி உபரியை திறம்பட நிர்வகித்து நுகர்வோருக்கு நிவாரணம் வழங்குவதோடு, விவசாயிகளின் புதிய அறுவடைக்கு நியாயமான விலையை உறுதி செய்வதே இந்த வேலைத்திட்டத்தின் நோக்கம் என்பதால், இதற்கு பொதுமக்கள் ஆதரவு வழங்குமாறும் அமைச்சர் வசந்த சமரசிங்க கேட்டுக்கொண்டார்.


