web log free
May 20, 2024

சிறுமின் சடலம் தோண்டி எடுப்பு

பதுளை ஹாலிஎல – கந்தேகெதர சார்ணியா தோட்டம் மஹதென்ன பிரிவில் கொலை செய்து புதைக்கப்பட்ட 9 வயது சிறுமியின் சடலம், பதுளை மாவட்ட நீதிமன்ற உத்தரவுக்கமைய நேற்று தோண்டி எடுக்கப்பட்டது.

பதுளை மாவட்ட நீதிமன்ற நீதவான் சமிந்த கருணாதாஸ மற்றும் சட்ட வைத்திய அதிகாரி ஆகியோரின் முன்னிலையில் ஹாலிஎல பொலிஸார் மற்றும் பொது மக்கள் உதவியுடன் சடலத்தை தோண்டி எடுத்துள்ளனர்.

இதனையடுத்து, இரசாயன பகுப்பாய்வுக்காக சிறுமியின் சடலம் கொழும்பிற்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சுமார் ஒரு வருடத்திற்கு முன்னாள் இந்த கொலை சம்பவம் இடம்பெற்றிருக்கக்கூடும் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

இந்த சம்பவம் தொடர்பில் சிறுமியின் தாய் மற்றும் அவரின் கள்ளக்காதலன் ஆகியோர் கடந்த 6ஆம் திகதி கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்டவர்களான மகேந்திரன் (வயது 30), ஜனாகி (வயது 26) என தெரிவிக்கபட்டுள்ளது.

வவுனியா செட்டிக்குளத்தை சேர்ந்த குறித்த சிறுமியின் தாய், அவரது கணவனை பிரிந்து கள்ளக்காதலனுடன் ஹாலிஎல பகுதியில் வசிந்து வந்துள்ளார்.

எனினும் கள்ளக்காதலனும் குறித்த பெண்ணும் சட்ட ரீதியாக திருமணம் முடிக்காதவர்கள் எனவும், அவர்களுக்கு இரண்டு ஆண் பிள்ளைகள் உள்ளதாகவும் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.

சிறுமி காணாமல் போய் இருப்பதை கண்டறிந்த குறித்த சிறுமியின் தாயின் சகோதரி, பதுளை பொலிஸ் நிலையத்தில் செய்த முறைபாட்டை தொடர்ந்தே இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கடந்த வருடம் ஜனவரி மாதம் 13ஆம் திகதி குறித்த கொலைச் சம்பவம் இடம்பெற்றதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட இருவரும் எதிர்வரும் 22ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு பதுளை மாவட்ட நீதவான் உத்தரவிட்டுள்ளார்.