web log free
May 10, 2025

புதிய பிரதமருக்கு ஜனாதிபதி வாழ்த்து

பிரித்தானியாவின் புதிய பிரதமராக தெரிவு செய்யப்பட்டுள்ள கொன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவர் பொரிஸ் ஜோன்சனுக்கு இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வாழ்த்து தெரிவித்துள்ளார்.

புதிய பிரித்தானிய பிரதமருக்கு வாழ்த்துச் செய்தியை அனுப்பிவைத்துள்ள ஜனாதிபதி, பிரெக்சிட் வேலைத்திட்டம் மற்றும் கொன்சர்வேட்டிவ் கட்சியின் தலைமைத்துவ பண்புகளை தான் மிக உன்னிப்பாக பரிசீலித்ததாகவும் பொரிஸ் ஜோன்சன் பிரித்தானிய பிரதமராக தெரிவானமை பிரித்தானியாவுக்கும் பொதுநலவாய நாடுகளுக்கிடையேயும் காணப்படும் தொடர்புகளில் முக்கிய மைல்கல்லாக அமையும் என தனது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

பொதுநலவாய நாடுகளுடனான உறவை மேம்படுத்துவதற்கான பொரிஸ் ஜோன்சன் அவர்களின் அர்ப்பணிப்பானது, ஐக்கிய இராச்சியத்திற்கும் இலங்கைக்குமிடையே காணப்படும் வலுவான ஒத்துழைப்பையும் நட்புறவையும் மேலும் வலுவடையச் செய்யுமெனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

இந்த வரலாற்று ரீதியான உறவு மற்றும் இருநாட்டு மக்களுக்கிடையிலான தொடர்புகளின் அடிப்படையில் உருவான தொடர்ச்சியான நெருங்கிய நட்புறவு ஐக்கிய இராச்சியத்திற்கும் இலங்கைக்குமிடையே காணப்படுவதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

பிரித்தானியாவின் புதிய பிரதமரை சந்திக்கவும் இரு நாடுகளுக்கிடையிலான பரஸ்பர உறவுகளை மேம்படுத்துவதற்காக ஒன்றிணைந்து செயற்படவும் தான் எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி தனது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd