web log free
September 20, 2024

சஜித் ஜனாதிபதியானால் ஜலனியே பிரதமர்

ஐக்கிய தேசியக் கட்சிக்குள் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் பல்வேறு சிக்கல்கள் தோன்றியுள்ளன. அண்மையில் இடம்பெற்ற செயற்குழுக்கூட்டத்தில் இது வெளிப்பட்டுள்ளது.

அது எமக்கும் தெரியும் என பாராளுமன்ற உறுப்பினர் ரமேஸ் பதிரன, கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

 

ஜனாதிபதித் தேர்தல் வேட்பாளராக சஜித் பெயரிடப்படுவார் என எதிர்ப்பார்க்கப்பட்டது. எனினும் அது இடம்பெறவில்லை.

கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தலைமைப்பதவியை விட்டுக்கொடுக்க எந்த சந்தர்ப்பத்திலும் தயாராக இல்லை. அதேபோல் சஜித் பிரேமதாச ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் எவ்வாறான கருத்துக்களை வெளியிட்டு வந்தாலும் கட்சியின் தலைமைப் பொறுப்பிற்கு வராமல் அவரால் அதனை சாத்தியப்படுத்த முடியாது என்பதும் நாம் அறிந்த விடயமே.

அதனைவிட சஜித் பிரேமதாசவிற்கு தனிப்பட்ட ரீதியில் ஜனாதிபதியாவது தொடர்பிலான தனிப்படட் விருப்பங்கள் எதுவும் இருப்பதாக தெரியவில்லை. அவருடன் இருப்பவர்களும், அவருக்கு நெருக்கமானவர்களும் இதுத் தொடர்பில் முன்மொழிவுகளை முன்வைத்து வருகின்றனர் அதனை நிராகரிக்க முடியாமற் அவர் முன்னிலையாவதாகவே அறியமுடிகின்றது.

கட்சிக்குள் ஏற்பட்டுள்ள முரண்பாடுகளுக்கு அமைய ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாவார் எனின் சாகல ரத்நாயக்க பிரதமர் பதவிக்கு நியமிக்கப்படக் கூடிய வாய்ப்பு காணப்படுகின்றது.

அந்த தீர்மானத்திலேயே ரணில் இருக்கின்றார். அதனைவிட கரு ஜயசூரிய ஜனாதிபதியாகும் பட்சத்தில் நவீன் திசாநாயக்க பிரதமராக நியமிக்கப்படுவதற்கே வாய்ப்புகள் காணப்படுகின்றன.

காரணம் நவீனின் அரசியல் செயற்பாடுகளை ஐக்கிய தேசியக் கட்சிக்குள் வளர்த்தெடுக்க வேண்டிய தேவை கருவிற்கு காணப்படுகின்றது. அதனைவிட சஜித் பிரேமதாச ஜனாதிபதியானால் பிரதமராக அவரது மனைவியே செயற்படுவார்.

 

எனினும், சஜித் ஜனாதிபதியானால் அவருடைய மனைவி ஜலனி பிரேமதாசாவே பிரதமராக தெரிவுசெய்யப்படுவார். 

காரணம் சஜித்தின் தந்தை செயற்பட்ட விதத்திலேயே சஜித் செயற்படவுள்ளதாக தெரிவித்து வருகின்றார். உண்மையில் ரணசிங்க பிரேமதாசவின் காலத்தில் பிரதமராக செயற்பட்டது டி.பி.விஜேதுங்க அல்ல அவரது மனைவி ஹேமா பிரேமதாச என்பது அனைவருக்கும் தெரியும்.

அவரது பெயரை கேட்டாலே மக்கள் அச்சம் கொள்வார்கள். அவ்வாறான ஒருவர் இந்த நாட்டிற்கு அவசியமில்லை என்பதே எமது கருத்து என குறிப்பிட்டுள்ளார்.