web log free
May 20, 2024

பிரதேச சபை உறுப்பினரின் கணவன் சடலமாக மீட்பு


ஏ.எச்.ஏ. ஹுஸைன்

வாகரைப் பிரதேச சபையின் பெண் உறுப்பினர் குமுதலெட்சுமியின் கணவரான காளிக்குட்டி சுதாகரன் (வயது 38), சடலமாக செவ்வாயக்கிழமை (22) மீட்கப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.

வாகரை அழகாபுரியைச் சேர்ந்த ஒரு குழந்தையின் தந்தையான இவரின் சடலம், வாவியிலிருந்தே மீட்கப்பட்டுள்ளது.

மீன் பிடித் தொழிலாளியான இவர் தட்டுமுனை ஆற்றில் இறால் பிடிப்பதற்காக வலை கட்டுவதற்கு ஞாயிற்றுக்கிழமை பகல் 10 மணியளவில் சென்றிருந்தார்.

எனினும், அவர் இரவாகியும் வீடு திரும்பாததால் உறவினர்கள் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. இதுகுறித்து, வாகரைப் பொலிஸ் நிலையத்தில் திங்கட்கிழமை (21) முறைப்பாடு பதிவு செய்யப்பட்டிருந்தது.

இதனையடுத்து பொலிஸாரும், மீனவர்களும், பிரதேச பொதுமக்களுமாகத் தேடியும் காணாமல் போனவரைப் பற்றிய எதுவித தயடங்களும் கிடைக்கவில்லை.
இந்நிலையில் செவ்வாய்க்கிழமை (22) காலை தட்டுமுனை ஆற்றிலிருந்து சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இவர் வலிப்பு நோய்க் குணம் உள்ளவர் என்று தெரிவித்த உறவினர்கள் சேறும் சகதியுமான ஆற்றில் வலை கட்டும்போது வலிப்பு நோய் ஏற்பட்டதன் காரணமாக வாவியில் வீழ்ந்து சேற்றில் புதையுண்டிருக்கலாம் என ஊகித்துள்ளனர்.

சடலம் உடற்கூறாய்வு சட்ட வைத்திய பரிசோதனைகளுக்காக வாகரை மாவட்ட வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது என்று தெரிவித்த பொலிஸார் சடலம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாகத் தெரிவித்தனர்.

Last modified on Tuesday, 22 January 2019 23:17