web log free
October 23, 2024

கணக்காய்வாளருக்கு 364 வருட கடூழிய சிறை

போலி ஆவணத்தை சமர்ப்பித்து தாம் சேவையாற்றிய நிறுவனத்திற்கு சொந்தமான 21, 99,130 ரூபா நிதியை மோசடி செய்தமை உள்ளிட்ட 19 குற்றச்சாட்டுகளின் கீழ் குற்றவாளியான கணக்காய்வாளர் ஒருவருக்கு கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு மேல் நீதிமன்றத்தால் குறித்த கணக்காய்வாளருக்கு 364 வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு இன்று தீர்ப்பளிக்கப்பட்டது.

குற்றவாளிக்கு 19 இலட்சம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள குற்றவாளியை காணும் இடத்தில் கைது செய்வதற்கான உத்தரவையும் நீதிபதி பிறப்பித்துள்ளார்.

2000 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 04 ஆம் திகதி தொடக்கம் 2011 ஜனவரி மாதம் 03 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் தனியார் நிறுவனமொன்றின் கணக்காய்வாளராக செயற்பட்ட போது போலி ஆவணங்களை சமர்ப்பித்து குறித்த நபர் மோசடியில் ஈடுபட்டுள்ளார்.

சந்தேகத்திற்கிடமின்றி குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளதாக அறிவித்த நீதிபதி, இவ்வாறான மோசடிகளில் ஈடுபடும் நபர்களுக்கு முன்மாதிரியான தண்டனை விதிக்கப்பட வேண்டும் என கூறி குற்றவாளிக்கு இன்று இந்த தண்டனையை விதித்துள்ளார்.