web log free
March 24, 2026

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்-2 அமைச்சர்கள் சிக்குவர்

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலுக்கு முன்னர் ஏற்பட்ட விடயங்களுக்கும், மாவனல்லைப் பிரதேசத்தில் புத்தர் சிலையை உடைத்தமை தொடர்பிலும் சென்ற அரசாங்கத்தில் உயர் பதவி வகித்த அமைச்சர்கள் தொடர்புற்றிருப்பதாக, உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலை ஆராய்வதற்காக ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட குழுவினருக்கு தகவல் கிடைத்துள்ளதாகத் தெரியருகின்றது.

ஆணைக்குழு விசாரணைகளை மேற்கொண்டுவரும் வேளை, இந்தத் தகவல்கள் ஆணைக்குழுவிற்குக் கிடைத்துள்ளதாகவும், வெகுவிரைவில் குறித்த சந்தேகநபர்களை ஆணைக்குழுவுக்கு அழைத்து அவர்களின் கருத்துக்களைப் பெறுவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

உயிர்த்த ஞாயிறு தினம் கத்தோலிக்க ஆலயங்கள் மூன்றிற்கும், பிரபலமான ஹோட்டல்கள்களுக்கும் தற்கொலை குண்டுத்தாக்குதலின் மூலம் 300 இற்கும் மேற்பட்டோர் கொலை செய்யப்பட்டமைக்கும் பொறுப்புக்கூர வேண்டியவர்கள் பற்றி விசாரணை மேற்கொள்வதற்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு நியமிக்கப்பட்டுள்ளது.

மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி ஜனக் த சில்வா தலைமை வகிக்கின்ற இந்த ஆணைக்குழுவின் ஏனைய உறுப்பினர்களாக முன்னாள் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளான பந்துல கருணாரத்ன, சுனில் ராஜபக்ஷ, முன்னாள் உயர் நீதிமன்ற நீதிபதி பந்துல அத்தபத்து மற்றும் நீதியமைச்சின் முன்னாள் செயலாளர் எச்.எம்.எஸ். அதிகாரி ஆகியோர் செயற்படுகின்றனர்.

ஆணைக்குழுவின் செயலாளராக எச்.எம்.பீ.பீ. ஹேரத் செயற்படுகின்றார்.

கொழும்பு பேராயர் மெல்கம் காதினல் ரஞ்சித் அவர்கள் ஆணைக்குழுவிற்கு சாட்சியளிக்கும்போது, இந்தத் தாக்குதலுடன் பிரபலமான அமைச்சர்கள் இருவர் தொடர்புடையவர்களாக இருக்கின்றனர் என்று சாட்சியங்களுடன் குறிப்பிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd