web log free
October 18, 2024

4 தமிழர்களுக்கு தூக்கு

 

இரத்தோட்டை, கந்​தேநுவர பிரதேசத்தில் இளைஞன் ஒருவன் மீது தாக்குதல்கள் நடத்தி, அவரை படுகொலை செய்தனர் உள்ளிட்ட மூன்று குற்றச்சாட்டுகளின் கீழ், குற்றவாளிகளாக இனங்காணப்பட்ட அப்பிரதேசத்தைச் சேர்ந்த ஐவருக்கு, மாத்தளை மத்திய மாகாண மேல் நீதிமன்ற நீதிபதி எச்.யூ.பீ. கரலியத்த, மரண தண்டனை விதித்து, நேற்று (19) தீர்ப்பளித்தார்.

மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களில் ஒ​ரே குடும்பத்தைச் சேர்ந்த இருவரும் அடங்குகின்றனர்.

கந்தேநுவர வெவலங்க லயன் அறைகளில் வசிக்கும், துறைசாமி தமிழ்ச் செல்வம் (வயது 37), செல்லையா பாலகிருஷ்ணன் (வயது 46), இருளாண்டி க​ணேஷன் (வயது 41), துறைசாமி மனோகரன் (வயது 43), செல்வராஜ் சிவகாந்தன் (வயது 36) ஆகியோருக்கே மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இதில், நான்காவது பிரதிவாதியான துறைசாமி மனோகரன், வழக்கு விசாரணைகள் இடம்பெற்றுகொண்டிருந்த காலத்திலேயே மரணமடைந்துவிட்டார்.

மாத்தளையில் நிறுவப்பட்ட முதலாவது மாகாண மேல் நீதிமன்றத்தால், வழங்கப்பட்ட முதலாவது மரண தட்டணை தீர்ப்பாகும் என்பதுடன், இந்த வழக்கு விசாரணையும் தீர்ப்பும், வரலாற்றில் இடம்​பிடித்துள்ளது.

கந்தேநுவரையைச் சேர்ந்த ஓட்டோ சாரதியான கருணாகரன் சுரேஷ்குமார் (வயது 24) திருமணம் முடிக்காத இளைஞன் மீது தாக்குதல்கள் நடத்தி அவரை படுகொலை செய்தமை, சட்டவிரோதமான முறையில் ஒன்றுகூடியமை, மரணத்தை விளைவித்தமை, தாக்குதல்கள் நடத்தி காயங்களை ஏற்படுத்தியமை ஆகிய ஐந்து குற்றச்சாட்டுகளின் கீழ், சந்தேகநபர்களுக்கு எதிராக, அதிக்குற்றச்சாட்டுப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.

இந்தப் பிரதிவாதிகள் ஐவருக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள முதலாவது குற்றச்சாட்டுக்கு, ​ஒவ்வொருவருக்கும் 6 மாதங்கள் கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அதற்கு மேலதிகமாக,உ10 ஆயிரும் ரூபாய் அபராதமும், அதனைச் செலுத்தத் தவறின், தலா இரண்டு மாதங்கள் சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டது.

மனிதப் படுகொலைக் குற்றச்சாட்டுக்கு மரண தண்டனை விதித்த நீதிபதி, மூன்றாவது குற்றச்சாட்டுக்கு ஒருவருட சிறைத்தண்டனையும், 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்தார். அதனை செலுத்த தவறின், இரண்டு மாதங்கள் சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டது.

நான்கு குற்றச்சாட்டிலிருந்து சகல பிரதிவாதிகளும் விடுவிக்கப்பட்டுள்ளனர். எனினும், மரணமடைந்தவரின் ​சகோதரரான கருணாகரன் அசோகன் என்பருக்கு தலா 10 ஆயிரம் ரூபாய் பிரகாரம் நட்டஈட்டு தொகையை வழங்குமாறு தீர்மானித்த நீதிபதி, அதனை செலுத்த தவறின், தலா ஆறு மாதங்கள் சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது. 

இந்த வழக்கின் ஆரம்பக்கட்ட விசாரணை, மாத்தளை நீதவான் நீதிமன்றத்தில் இடம்பெற்றது. மேலதிக விசாரணை கண்டி மாகாண மேல் நீதிமன்றத்தில் முன்னெடுக்கப்பட்டது. அதன்பின்னர், அவ்வழக்கு விசாரணை, மாத்தளையில் நிறுவப்பட்ட புதிய மேல்நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது.