web log free
May 03, 2024

மூடிய அறைக்குள் மூவரும் பேசியது என்ன?

ரவூப் ஹக்கீம், ரிஷாத் பதியுத்தீன், திகாம்பரம் ஆகியோர் புதியதோர் அரசியல் கூட்டணியை உருவாக்குவது தொடர்பில் இரகசியப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதாகத் தெரியவருகின்றது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கொழும்பு, கம்பஹா, களுத்துறை, கண்டி போன்ற தென் பகுதியில் போட்டியிடுவதற்கு தீர்மானம் எடுத்துள்ளதையிட்டு பேச்சுவார்த்தை இடம்பெற்றுள்ளதாக அரசியல் வட்டாரங்களிலிருந்து செய்திகள் கசிகின்றன. இந்த மூன்று அரசியல் கட்சிகளையும் பிரதிநிதித்துவப்படுத்தக்கூடிய பாராளுமன்ற உறுப்பினர்கள் 18 பேர் தற்போது பாராளுமன்றில் உள்ளனர்.

தங்களுக்கு அதிகப் பலம்மிக்க மாவட்டங்கள் எவ்வெவை என்பதைப் பற்றியும் அம்மாவட்டங்களில் தேர்தலில் களம் குதிப்பது பற்றியும் அவர்கள் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாகத் தெரியவருகின்றது. அதற்கேற்ப முஸ்லிம்களின் வாக்குகள் அதிகம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்ற பகுதிகளில் தமிழ் முற்போக்குக் கூட்டணி போட்டியிடாதிருப்பதற்கும், தமிழ் முற்போக்குக் கூட்டணியின் பலம் மிகைத்துக் காணப்படும் பகுதிகளில் முஸ்லிம் வேட்பாளர்கள் போட்டியிடாமைக்கும் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

ஆயினும் இந்த யோசனைக்கு தமிழ் முற்போக்குக் கூட்டணியின் மனோ கணேஷன் பகுதியினர் விருப்புத் தெரிவித்துள்ளபோதும், பீ. திகாம்பரம் பகுதியினர் இதுவரை தங்களது விருப்பினைத் தெரிவிக்கவில்லை எனவும் தெரியவருகின்றது.