ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியும் இணைந்து ஸ்ரீ லங்கா சுதந்திர பொதுஜன பெரமுனவில் போட்டியிடுவதற்கு தீர்மானித்துள்ள நிலையில், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு மொட்டுக்குள் கடுமையான எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த எதிர்ப்பை அடுத்து மனமுடைந்து போன, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவை , ஜனாதிபதி காரியாலயத்தில் வைத்து சந்தித்து தன்னுடைய மனக்குறைகளை கோத்தாவிடம் தெரிவித்துள்ளார்.
இந்த சந்திப்பில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் சார்பில் நிமல் சிறிபாலடி சில்வா, தயாசிறி ஜயசேகர, மஹிந்த அமரவீர ஆகியோரும் கலந்துகொண்டனர்.
புதிய கூட்டணியில் போட்டியிடும் போது, சில அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள் முன்வைக்கும் குற்றச்சாட்டுகள் தொடர்பில் மைத்திரிபால சிறிசேன தலைமையிலான அணியினர் கடுமையான அதிருப்தியை தெரிவித்துள்ளனர்.
தேர்தலில் போட்டியிடும் போதும் முன்னெடுக்கவேண்டிய தேர்தல் வேலைத்திட்டம் குறித்தும் இதன்போது விரிவாக ஆராயப்பட்டது.
இந்த சந்திப்பு சுமார் ஒன்றரை மணிநேரத்துக்கு மேலாக இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.