ஐக்கிய தேசியக் கட்சியின் விசேட செயற்குழுக் கூட்டத்தை நாளை கூட்டியுள்ளார் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க.
நேற்று சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி அரசியல் கூட்டணி ஆரம்ப நிகழ்வில் கலந்து கொண்ட கட்சிப் பிரமுகர்கள் தொடர்பில் நடவடிக்கை எடுக்க இந்தக் கூட்டத்தில் ஆராயப்படவுள்ளது.
அதேசமயம் பொதுத் தேர்தலுக்கான வேட்புமனு வழங்க விசேட குழுவொன்றையும் நியமிக்க இங்கு பேசப்படவுள்ளது.
நேற்றைய சஜித்தின் கூட்டத்தில் கலந்து கொண்ட முன்னாள் எம் பிக்களான அலவத்துவல ,கயந்த கருணாதிலக்க ,விஜேபால ஹெட்டியாராச்சி ,முஜிபுர் ரஹ்மான் ,சஞ்சய பெரேரா ஆகியோர் நேற்று மாலை ரணிலை சந்தித்துப் பேசினர் . சரியான முடிவுகளை எடுக்காமல் அரசியல் எதிர்காலத்தை இல்லாமல் செய்துகொள்ள வேண்டாமென ரணில் அவர்களை அறிவுறுத்தியுள்ளார்.
இன்று கட்சியின் தொகுதி அமைப்பாளர்கள் அனைவரையும் கொழும்புக்கு அழைத்துள்ள ரணில் அவர்களுடன் தேர்தல் வியூகங்களை பற்றி கலந்துரையாடவுள்ளார்.
இதற்கிடையில் இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் பதவியில் இருந்து ஹரீன் பெர்னாண்டோவை அகற்றி அந்த இடத்திற்கு நவீன் திஸாநாயக்கவை நியமிக்கவும் ,மகளிர் அணி பொறுப்புக்களில் இருந்து தலதா அத்துக்கோரள – சந்திராணி பண்டார ஆகியோரை அகற்றி அந்த இடத்திற்கு யாப்பஹுவ அமைப்பாளர் அச்சினி லொக்குபண்டாரவை நியமிக்கவும் ,இளைஞர் அணிப் பொறுப்புகளுக்கு காவிந்த ஜெயவர்தனவை நியமிக்கவும் ,ஊடக பொறுப்புகளுக்கு ராஜித சேனாரத்ன , ருவன் விஜயவர்தன ,ஆசு மாரசிங்க ஆகியோரை நியமிக்கவும் ரணில் தீர்மானித்துள்ளார்.