web log free
May 09, 2025

டிரம்புக்கு கொரோனா பரிசோதனை

சீனாவில் கடந்த டிசம்பர் மாதம் உருவான கொரோனா வைரஸ் தற்போது உலகையே அச்சுறுத்திவருகிறது.

உலகம் முழுவதும் 121 நாடுகளுக்கு பரவியுள்ள இந்த வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 5 ஆயிரத்து 43 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 1 லட்சத்து 34 ஆயிரத்து 300 க்கும் அதிகமானோருக்கு வைரஸ் பரவி இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதற்கிடையில், அமெரிக்காவிலும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 41 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 2 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து, வெள்ளைமாளிகையில் செய்தியாளர்களை சந்தித்த ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் நாடு முழுவதும் இன்று அவசர நிலை பிரகடனம் செய்வதாக அறிவித்தார்.

அவர் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியதாவது: ´´அரசுக்கு உள்ள முழு அதிகாரத்தையும் பயன்படுத்தி அமெரிக்கா முழுவதும் அவசரநிலையை பிரகடனம் செய்கிறேன். அடுத்த 8 வாரங்கள் மிகவும் முக்கியமான தருணங்கள். நாட்டில் கொரோனா பரிசோதனைக்கான அளவுகோலை அதிகப்படுத்தியுள்ளோம்.

மாணவர்களுக்கான கடன்களின் வட்டி தொகை கொரோனா காரணமாக தள்ளுபடி செய்யப்படுகிறது. கூடுதல் இருப்புக்காக மிகப்பெரிய அளவில் கச்சா எண்ணெயை கொள்முதல் செய்ய திட்டமிட்டுள்ளோம்.

பிரேசில் ஜனாதிபதி தனக்கு கொரோனா இல்லை என தெரிவித்துள்ளார். தற்போது வரை கொரோனா குறித்த அறிகுறிகள் எனக்கும் எதும் இல்லை. ஆனாலும், கூடிய விரைவில் கொரோனா பரிசோதனை செய்துகொள்ளலாம் என நான் முடிவு செய்துள்ளேன்´´ இவ்வாறு அவர் கூறினார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd