web log free
October 18, 2024

ரிசாத்தின் சகோதரக்கு ரூ.100 கோடி- சி.ஐ.டி

முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் சகோதரரான பதியுதீன் மொஹமட் ரியாஜ்ஜின் மக்கள் வங்கியில் உள்ள கணக்குக்கு அரச சார்பற்ற நிறுவனமொன்றிடமிருந்து கிடைக்கப்பெற்றுள்ள சுமார் நூறு கோடி ரூபா தொடர்பில் சி.ஐ.டி.எனும் குற்றப் புலனாய்வு திணைக்களத்தினர் விஷேட விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக  கல்கிஸை பிரதான நீதவான் உதேஷ் ரணதுங்கவுக்கு  விசாரணையாளர்கள் இன்று அறிவித்தனர்.  

குற்றப் புலனயவுத் திணைக்களத்தின் பிரதான பெண் பொலிஸ் பரிசோதகர் நிரோஷா இதனை நீதிமன்றுக்கு அறிவித்தார்.

குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் பிரதி பொலிஸ்மா அதிபர் நுவன் வெதசிங்க மற்றும் குற்றப் புலனாய்வு பிரிவன் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் டப்லியூ. திலக்கரத்ன ஆகியோருக்கு, கடந்த பெப்ரவரி மாதம்  ச.தோ.ச நிலையத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் நிதி மோசடி தொடர்பான ஆவணங்கள் வீடொன்றில் மறைத்துவைக்கப்பட்டுள்ளதாக புலனாய்வு தகவல் ஒன்று கிடைத்துள்ளது.   

கடந்த பெப்ரவரி 8 ஆம்  திகதி இந்த விடயம் தொடர்பில் நீதிவான் நீதிமன்றத்திற்கு அறிவித்து பெற்றுக் கொண்ட சோதனை உத்தரவுக்கமைய சோதனை நடவடிக்கைகளை சி.ஐ.டி.யினர் முன்னெடுத்து ஆவணங்கள் பலவற்றை மீட்டுள்ளதுடன் ஒருவரைக் கைதும் செய்துள்ளனர்.  

இது குறித்த நீதிவான் நீதிமன்ற விசாரணைகள் இன்று மீள கல்கிசை நீதிவான் நீதிமன்றில் விசாரணைக்கு வந்தது.

இதன்போது  சம்பவம் தொடர்பில் கைதாகி  விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேக நபரான மொஹமட் இம்ரான் என்ற நபர் சிறைச்சாலை அதிகாரிகளால் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.

இதன்போது சி.ஐ.டி.யின் விசாரணையாளர்கள் சார்பில் விசாரணை அதிகாரி, பிரதான பெண் பொலிஸ் பரிசோதகர் நிரோஷா, பொலிஸ் பரிசோதகர் பிரியஞ்ஜித், உப பொலிஸ் பரிசோதகர் ஆனந்த  மற்றும் சார்ஜன் பெரமுன உள்ளிட்டோர் ஆஜராகினர்.

இந் நிலையில் குறித்த விவகாரத்தில் முன்னெடுக்கப்பட்டுள்ள மேலதிக விசாரணைகள் தொடர்பில் பிரதான பெண் பொலிஸ் பரிசோதகர் நிரோஷா நீதிவானுக்கு மேற்கண்ட விடயங்களை தெளிவுபடுத்தினார்.

இதன் பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேக நபரின் பிணைக் கோரிக்கையை நிராகரித்த நீதிவான் அவரை எதிர்வரும் 20 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறும் உத்தரவிட்டார்.