web log free
May 13, 2024

ஊரடங்கு சட்டம்- 22 அன்று மீள் அறிவிப்பு

இன்று (20) மாலை 6 மணி முதல் எதிர்வரும் திங்கள் (23) காலை 6 மணி வரை இலங்கை முழுவதும் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படும் என ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

புத்தளம், சிலாபம், நீர்க்கொழும்பு பொலிஸ் பிரிவின் கொச்சிக்கடை, ஜா-எல மற்றும் வத்தளை பொலிஸ் பிரிவு பகுதிகளில் தளர்த்தப்பட்ட பொலிஸ் ஊரடங்குச் சட்டம் மீண்டும் நண்பகல் 12 மணி முதல் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் அனைத்து விதமான ரயில் சேவைகளும் இன்று (20) பிற்பகல் 3.30 முதல் இடைநிறுத்தப்படுவதாக ரயில்வே கட்டுப்பாட்டு அறை அறிவித்துள்ளது.

மீண்டும் எதிர்வரும் திங்கட்கிழமை (23) காலை 6 மணி முதல் ரயில் சேவைகள் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என ரயில்வே கட்டுப்பாட்டு அறை அறிக்கை குறிப்பிட்டுள்ளது.

அதன்படி, இன்றைய நாளுக்கான இறுதி ரயில் கொழும்பு கோட்டையில் இருந்து மஹவ நோக்கி பிற்பகல் 3.30 மணிக்கு புறப்பட்டுச் செல்லவுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு அறை குறிப்பிட்டுள்ளது.

மேலும் இன்று (20) பிற்பகல் 4 மணி தொடக்கம் அனைத்து அதிவேக வீதிகளும் மூடப்படுவதாக வீதி அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் சமிந்த அதுலுவகே தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், மத வழிபாட்டுக்கான யாத்திரைகள், உல்லாச பயணங்கள் மற்றும் சுற்றுலா நடவடிக்கைகள் அனைத்தும் மறு அறிவித்தல் வரை தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டிருப்பதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, எதிர்வரும் திங்கட்கிழமை (23) காலை 6 மணிக்கு ஊரடங்கு சட்டம் நீக்கப்படுவதுடன், அதனை மீண்டும் அமுல்படுத்துவது குறித்து 22 ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமை (22) அறிவிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Last modified on Friday, 20 March 2020 10:27