web log free
May 12, 2024

‘சடலங்கள் மீது அரசியல் செய்ய தேவையில்லை’

வரலாற்றில் மிகவும் ஆபத்தான பாதிப்புகளுக்கு நாடும், நாட்டு மக்களும் முகம் கொடுத்து கொண்டிருக்கின்றனர். இந்நிலையில், கட்சி பேதங்கள், அரசியலை மறந்து தேசிய நிகழ்ச்சி நிரலின் ஊடாக சகலரும் ஓரணியில் செயற்படவேண்டும் என முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய சகலரிடமும் கேட்டுக்கொண்டுள்ளார்.

இந்த நிலைமையை புரிந்து  கொண்டு, மதத் தலைவர்கள், அரசியல் கட்சிகளின் தலைவர்கள், சிவில் அமைப்புகள், வர்த்தகர்கள் உள்ளிட்ட பல பிரிவுகளைச சேர்ந்தவர்கள், அதன் முக்கியத்துவத்தை உணர்ந்து செயற்படுகின்றனர் என்றும் அவர் குறிப்பிட்டார். 

கொரோனா தொற்றுக்கு உள்ளான முதலாவது இலங்கையரை கண்டறிந்த நேரத்திலேயே சகல கட்சிகளையும் அழைத்து, இவ்வாறான கலந்துரையாடலை நடத்தி, தீர்மானமொன்றை எடுத்திருக்கலாம் என்றும் தெரிவித்த அவர், தேசிய அனர்த்தத்துக்கு முகம் கொடுத்து கொண்டிருக்கும் இந்த தருணத்தில், சடலங்கள் மீது நின்று கொண்டு அரசியல் செய்யும் உரிமை எத்தரப்புக்கும் இல்லை என்றார்.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் அலரிமாளிகையில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.