web log free
May 05, 2024

குழம்பிய குட்டையில் மீன்பிடித்தோர் கைது

எவ்வளவு சொன்னாலும் திருந்த மாட்டார்கள் என்றால், அவ்வாறானவர்களை ஒன்றுமே செய்யமுடியாது. 

இந்தியாவில் தற்போது அமுல்படுத்தப்படுவதைப் போல, பொலிஸ் ஊரடங்கு சட்டத்தை மீறுவோரை சுட்டுத் தள்ளுவதை தவிர வேறொன்றும் இல்லை.

பணத்தை எப்போது வேண்டுமானாலும் சம்பாதிக்கலாம். ஆனால், உயிர் போய்விட்டால் எதனையும் சம்பாதிக்கமுடியாது.

அவ்வாறானதொரு நிலைமையை ஏற்படுத்தும் வகையில் ஊரடங்கு சட்டத்தை பயன்படுத்திய மூவர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் இலங்கையில் இடம்பெற்றுள்ளது. 

கொழும்பிலிருந்து தம்புள்ளையில் மரண வீடொன்றுக்கு செல்வதாக கூறி அனுமதிப்பத்திரத்தை பெற்றுக்கொண்டு, தம்புள்ளையிலிருந்து மூன்று வாகனங்களில் சுமார் 2000 கிலோ நிறையுடைய மரக்கறிகளை ஏற்றிவந்த மூவர், யக்கல பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். 

யக்கல பொலிஸ் பிரிவில் இருக்கும் வீதி சோதனை சாவடியில் வாகனம் நிறுத்தப்பட்டு சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. 

ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும் போது வாகனத்தில் பயணிப்பதற்கான அனுமதியை பெற்றுக்கொண்ட அந்த நபர், தானும் இன்னுமிருவரும் தம்புள்ளையில் மரணவீடொன்றுக்கு சென்று வருவதாகவும் வரும் வழியில் மரக்கறிகளை கொஞ்சத்தை ஏற்றிக்கொண்டு வருவதாகவும் தெரிவித்துள்ளனர். 

அத்துடன் இன்னுமிரண்டு வேன்களும் வருவதாகவும் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளனர்.

எனினும், மூன்று வாகனங்களில் மூன்றுபேர் மரண வீடொன்றுக்கு சென்று திரும்புவது தொடர்பில் சந்தேகம் கொண்டு விசாரணைக்கு உட்படுத்திய போதே, விபரம் அம்பலமானது.

மரண வீட்டுக்கு செல்வதாக பொய் கூறிவிட்டு, ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும் நேரத்தில் பயணிப்பதற்கான அனுமதி சீட்டையும் பெற்றுக்கொண்டு, மரக்கறிகளை கொழும்புக்கு ஏற்றியமை விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது.

மூவரையும் கைது செய்த பொலிஸார், அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை எடுக்கவுள்ளனர் என அறியமுடிகின்றது. 

 

Last modified on Saturday, 28 March 2020 15:56