web log free
July 01, 2025

சஹ்ரானின் மற்றுமொரு முகாம் அம்பலமானது

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரியான சஹ்ரான் ஹாஷிமினால், மூதூர் பிரதேசத்தில் நடத்தப்பட்ட பயிற்சி முகாம் தொடர்பிலான தகவலை, குற்றப்புலனாய்வு பிரிவினர் வெளிப்படுத்தினர் என செய்திகள் வெளியாகியுள்ளன.
 
உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் நடத்தப்பட்டு, ஏப்ரல் 21ஆம் திகதியுடன் ஒருவருடம் நிறைவடைந்துள்ளது. இந்நிலையிலேயே இந்த தகவல் வெளியாகியுள்ளது.
 
அந்த தாக்குதல்கள் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டு, தடுப்புக்காவல் உத்தரவின் பேரில், தடுத்துவைக்கப்பட்டுள்ள சாதிக் என்பவரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையியே இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
 
மாவனெல்ல பிரதேசத்தில் புத்தர் சிலைகளை உடைத்து சேதப்படுது்தியமை உள்ளிட்ட பிரிவினைவாத செயற்பாடுகள் பலவற்றுடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில் இவர், கம்பளை பிரதேசத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டார். 
 
அவருடைய சகோதரனும் குற்றப்புலனாய்வுப் பிரிவின் பொறுப்பின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளார். 
 
மூதூர் தாஹித் நகர் பிரதேசத்திலுள்ள விவசாய நிலத்தில் தான் உள்ளிட்ட 5 பேர் பயிற்சிகளை பெற்றுக்கொண்டதான சாதிக் என்வர் தெரிவித்துள்ளார்.
 
அந்த காணி, மாவனெல்ல பிரதேசத்திலுள்ள மௌலவி ஒருவருக்கு சொந்தமானதென அறியமுடிகின்றது. 
 
எவ்வாறெனினும், அந்தக் காணியின் உண்மையான உரிமையாளர் தோப்பூர் பிரதேசத்தை சேர்ந்தவர் ஆவார் எனவும் அறியமுடிகின்றது. 
 
விசாரணைகளை முன்னெடுக்கும் குற்றப்புலனாய்வு பிரிவினர், சாதிக் என்பரை அவ்விடத்துக்கு அழைத்துச் சென்று மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். எனினும்,
 
சந்தேகத்துக்கிடமான முறையில் எவையும் மீட்கப்படவில்லை என அறியமுடிகின்றது என்றும் அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
 
 
Last modified on Saturday, 02 May 2020 08:27
© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd