தலவாக்கலையில் தற்கொலை செய்துக் கொள்வதற்காக முயற்சித்த பெண் மன்னிப்பு கோரியுள்ளார்.
தற்கொலை செய்துக் கொள்ள முயற்சித்த குறித்த பெண்ணை காப்பாற்றுவதற்காக 32 வயதான இளைஞன் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட குறித்த பெண்ணை பார்ப்பதற்காக காவல் நிலைய பொறுப்பதிகாரி பிரதான காவல்துறை பரிசோதகர் ருவண் பெர்னாண்டோ தலவாக்கலை வைத்தியசாலைக்கு சென்றுள்ளார்.
இதன் போது கருத்து வெளியிட்ட பெண் தனது தீர்மானத்திற்காக மன்னிப்பு கேட்டுள்ளார்.
“எனது தனிப்பட்ட காரணத்தினால் நான் அவசர தீரமானம் ஒன்றை எடுத்து விட்டேன். இதனால் ஒரு உயிரை இழக்க நேரிட்டுள்ளது. அதற்கான என்னை மன்னித்து விடுங்கள்.
நான் வைத்தியசாலையில் இருந்து வெளியேறியவுடன் என்னால் உயிரிழந்தவரின் குடும்பத்தினரும் குழந்தைகளையும் பார்த்துக் கொள்வேன்.
நீரில் வைத்து நான் அவரது கையால் பிடித்துக்கொள்ளப்பட்டேன். அதன் பின்னர் நாங்கள் இருவரும் நீருக்குள் சென்றுவிட்டோம். நான் மேலே வந்து விட்டேன். என்னை காப்பாற்ற வந்தவர் மேலே வரவில்லை.
யாரோ டியுப் ஒன்றை பயன்படுத்தி என்னை காப்பாற்றியது எனக்கு நினைவில் உள்ளது. அது யார் என்று தற்போதே அறிந்துக் கொண்டேன். தலவாக்கலை காவல்துறை அதிகாரியே என்னை காப்பாற்றியுள்ளார். அனைவருக்கும் நன்றி” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
அந்தப் பெண், பாடசாலை காலத்தில் இருந்து ஒருவரை காதலித்துள்ளார். அதற்கு வீட்டில் கடுமையான எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அப்பெண்ணுக்கு வேறொரு மாப்பிள்ளையை வீட்டார் பார்த்துள்ளனர். அவருக்கு 40 வயதாகிறது.
இதனை கேள்வியுற்ற காதலன், தற்கொலை செய்துகொண்டுள்ளார். அவருடைய நல்லடக்கம் கடந்த 18ஆம் திகதியன்று இடம்பெற்றுள்ளது.
காதலன் இல்லை. வீட்டாரின் தொந்தரவால் மனநொந்துபோயிருந்தேன். இதனால், தவறுதலாக முடிவை எடுத்துவிட்டேன் என்றும் அந்தப் பெண் தெரிவித்துள்ளார்.
என்னை காப்பாற்றிவிட்டு உயிர்நீத்த ரிஸ்வானின் குழந்தைகளை பார்த்துக்கொள்வேன் என்றும் அப்பெண் தெரிவித்தார்.