web log free
January 12, 2026

2 மாவட்டங்களின் வாக்காளர் அட்டை அச்சிடப்படவில்லை

நடைபெறவுள்ள  பொதுத்தேர்தலை முன்னிட்டு 20 மாவட்டங்களுக்கான வாக்காளர் அட்டைகளை அச்சிடும் பணிகள் நிறைவடைந்துள்ளதாக அரச அச்சகம் தெரிவித்துள்ளது.

அந்தவகையில் கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் குருநாகல் உள்ளிட்ட மாவட்டங்களுக்கான வாக்காளர் அட்டைகள் அச்சிடப்பட்டு வருவதாக அரச அச்சகர் கங்கா கல்பனி லியனகே குறிப்பிட்டுள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் கூறியுள்ளதாவது, “கொழும்பு மாவட்டத்திற்கான வாக்காளர் அட்டைகளை அச்சிடும் பணிகள் 50 வீதம் நிறைவடைந்துள்ளது.

மேலும்  மாத்தளை, நுவரெலியா, மாத்தறை, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மட்டக்களப்பு, அநுராதபுரம், பொலன்னறுவை, இரத்தினபுரி, கேகாலை, காலி,  ஹம்பாந்தோட்டை மற்றும் பதுளை ஆகிய மாவட்டங்களுக்கான வாக்காளர் அட்டைகள் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

அந்தவகையில், திகாமடுல்ல மற்றும் மொனராகலை தேர்தல் மாவட்டங்களுக்கான வாக்காளர் அட்டைகள் இன்றைய தினமும் வன்னி தேர்தல் மாவட்டத்திற்குரிய வாக்காளர் அட்டைகள் நாளைய தினமும் தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் ஒப்படைக்கப்படும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கண்டி மற்றும் புத்தளம் ஆகிய இரண்டு மாவட்டங்களின் வாக்காளர் அட்டைகளே இதுவரையிலும் அச்சிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd