web log free
September 03, 2025

கருணா- மகிந்தானந்த மீது மஹிந்த கடும் சீற்றம்

முன்னாள் அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகே மற்றும் விநாயகமூர்த்தி முரளீதரன் ஆகியோர் சமீபத்தில் வெளியிட்டுள்ள கருத்துக்கள் குறித்து பிரதமர் மகிந்த ராஜபக்ச கடும் சீற்றம் வெளியிட்டுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

முன்னாள் அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகே 2011 உலக கிண்ண இறுதிப்போட்டியில் ஆட்டநிர்ணய சதி இடம்பெற்றதாக தெரிவித்து சர்ச்சையை ஏற்படுத்தியதை தொடர்ந்து அவரை கடுமையாக சாடியுள்ள பிரதமர் ஒன்பது வருடங்களின் பின்னர் வெளியான அந்த கருத்தினை திருத்திக்கொள்ளுமாறு கேட்டுள்ளார்.

பிரதமர் கடும் சீற்றம் வெளியிட்டுள்ளதை தொடர்ந்து முன்னாள் அமைச்சர் இந்த வாரம் செய்தியாளர் மாநாட்டினை நடத்தி தனது கருத்து குறித்து விளக்கமளிப்பார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

மும்பாயில் இடம்பெற்ற உலக கிண்ண இறுதிப்போட்டியை பார்வையிடச்சென்றிருந்த மகிந்த ராஜபக்ச அந்த போட்டியுடன் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வுபெறவுள்ள முத்தையா முரளீதரனிற்காக இலங்கை கிண்ணத்தை வெல்லவேண்டும் என விருப்பம் வெளியிட்டிருந்தார்

இதேவேளை கருணா வெளியிட்டுள்ள கருத்தினை தொடர்ந்து ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுன வேட்பாளர்களை பொறுப்புணர்வுடன் நடந்துகொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ளதுடன் சர்ச்சைக்குரிய கருத்துக்களால் பொதுஜனபெரமுனவின் பிரச்சாரம் பாதிக்கப்படலாம் என அறிவுறுத்தியுள்ளார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd