விடுதலைப் புலிகளுக்கு பேச்சுவார்த்தை நடத்தி பிரச்சினையைத் தீர்த்துக்கொள்வதற்கான தேவை இருக்கவில்லை எனவும் யுத்தத்தின் மூலமே தீர்வைக்காண முயன்றதாகவும் சீனாவுக்கான இலங்கை தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள கலாநிதி பாலித கோஹன தெரிவித்துள்ளார்.
அத்துடன், நோர்வேயின் பிரதிநிதி எரிக் சொல்ஹெய்ம் இரண்டு தரப்புக்கும் சமமாக பணியாற்றியதாக தான் நம்பவில்லை எனவும் அவருடைய பக்கச் சார்பு தொடர்பாக தனக்கு பாரிய சந்தேகம் காணப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ் தேசியப் பத்திரிகைக்கு வழங்கிய நேர்காணலின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
கலாநிதி பாலித கோஹன முன்னர் அரசாங்க சமாதமான செயலகத்தின் தலைவராகவும் வெளிவிவகார அமைச்சின் செயலாளராகவும் இலங்கையின் ஐக்கிய நாடுகள் சபைக்கான தூதுவராகவும் பணியாற்றியுள்ளார்.
மேலும், விடுதலைப் புலிகளுடனான மூன்று சுற்றுப் பேச்சுவார்த்தைகளில் அரசாங்கத்தின் சார்பில் பாலித கோஹன 2006ஆம் ஆண்டில் கலந்துகொண்டிருந்தார். ஜெனீவாவில் நடைபெற்ற இரண்டு பேச்சுவார்த்தைகள் மற்றும் நோர்வேயின் ஒஸ்லோவில் நடைபெற்ற பேச்சுவார்த்தையிலும் பாலித கோஹன பங்ககேற்றிருந்தார்.
இந்நிலையில் இந்தப் பேச்சுவார்த்தைகள் குறித்து அவர் தெரிவிக்கையில், “அந்தக் காலத்தில் ஒருநாடாக, ஒரு அரசாங்கமாக பேச்சுவார்த்தை ஊடாக யுத்தத்தை முடிப்பதற்கு நாங்கள் பாரிய முயற்சிகளை செய்திருந்தோம். ஆனால், நாங்கள் மேற்கொண்ட அந்த அனைத்து முயற்சிகளையும் விடுதலைப் புலிகள் அமைப்பு நிராகரித்தது.
ஒருசில சமயங்களில் ஜெனிவாவிற்குச் சென்று பேச்சுவார்த்தை நடத்தினோம். அங்கு இரண்டு சந்தர்ப்பங்களிலும் பேச்சுவார்த்தையிலிருந்து புலிகள் அமைப்பே எழுந்து சென்றது.