web log free
May 09, 2025

ஏப்ரலில் மூன்றாவது கட்ட பேச்சுவார்த்தை

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் சிறிலங்கா பொதுஜன பெரமுன இணைந்து எதிர்வரும் தேர்தல்களில் ஐக்கியதேசிய முன்னணிக்கு எதிராக அமைக்க உத்தேசித்துள்ள புதிய கூட்டணி தொடர்பான இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை நிறைவடைந்துள்ளது.

எதிர்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் இன்று முற்பகல் இந்த பேச்சுவார்தைகள் இடம்பெற்றது.

இரு கட்சிகளுக்கும் இடையிலான மூன்றாவது கட்ட பேச்சுவார்த்தை ஏப்ரல் மாதம் 10 ஆம் திகதி இடம்பெற உள்ளதாக ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

பேச்சுவார்த்தை நடத்துவதற்காக இன்று காலை இரண்டு தரப்பினதும் பிரதிநிதிகளும் எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்திற்கு வருகை தந்திருந்தனர்.

எதிர்வரும் தேர்தல்களை எதிர்கொள்வதற்காக கூட்டணி அமைப்பதற்கான முயற்சிகளில் ஐக்கிய தேசிய கட்சி தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஸ்ரீலங்காபொதுஜன முன்னணி ஆகிய கட்சிகள் ஈடுபட்டுவருகின்றன.

ஐக்கிய தேசிய முன்னணியின் கூட்டணியை எதிர்த்து ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவும் இணைந்து புதிய கூட்டணி ஒன்றை அமைப்பதற்கும் திட்டமிடப்பட்டுள்ளன.

அதனையடுத்து, மார்ச் 14ஆம் திகதி ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி மற்றும் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆகிய கட்சிகளுக்கு இடையிலான முதற்கட்ட பேச்சுவார்த்தை இடம்பெற்றது.

இந்த கலந்துரையாடலானது வெற்றியளித்திருந்தாக, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், இரண்டாம்கட்ட சந்திப்பானது, இன்று முற்பகல் எதிர்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் இடம்பெற்றது.

இந்த கலந்துரையாடலில், சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர, முன்னாள் பொதுச் செயலாளர் றோஹண லக்ஷ்மன் பியதாச மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் திலங்க சுமதிபால ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.

பொது ஜன பெரமுன சார்பில் அந்த கட்சியின் தவிசாரளர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ், டலஸ் அழகப் பெரும ஆகியோரும் கலந்து கொண்டுள்ளனர்.

Last modified on Wednesday, 11 September 2019 01:46
© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd