web log free
May 18, 2024

இலங்கை நாட்டின் அழிவு குறித்து எதிர்கட்சித் தலைவர் வௌியிட்டுள்ள பரபரப்பான கருத்து

 

மலைநாட்டு கிளர்ச்சி காலத்தில் பலன் தரக்கூடிய பல மரங்கள் அழிக்கப்பட்டதாகவும் காலிங்கன் யுகத்தில் இந்நாட்டின் வரலாற்று பாரம்பரியம் அழிக்கப்பட்டதாக கூறிய எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச, தற்போதைய அரசாங்கம் இந்நாட்டின் விவசாய பாரம்பரியத்தை சீரழித்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் தம்புள்ளை தேர்தல் தொகுதிக்கான கூட்டமொன்று தம்புள்ள நகரில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் உரையாற்றுகையில்,

வெடிப்புகளை நிறுத்துவதாக கூறி ஆட்சி வந்த அரசாங்கத்தின் கீழ் கையில் எடுக்கும் சமையல் எரிவாயு சிலிண்டர்கள் கூட வெடிக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும்,அதுமாத்திரமின்றி திரவ உர கொள்கலனும் வெடிக்கின்றன என்றும் அவர் குறிப்பிட்டார்.

அதுபோதாமைக்கு கொண்டுவரப்பட்ட திரவ உரம் பொறுத்துக்கொள்ள முடியாத அளவிற்கு துர்நாற்றம் உடையது என்று கூறிய எதிர்க்கட்சி தலைவர், துர்நாற்றம் அலரி மாளிகை,ஜனாதிபதி மாளிகை மற்றும் பாராளுமன்றத்தினால் உணர முடியாது என்றும் தெரிவித்தார்.

பொதுமக்களின் துயரங்களை உணரும் நாடி அரசாங்கத்திற்கு கிடையாது என கூறிய எதிர்க்கட்சி தலைவர்,சீனி மோசடி,எண்ணெய் மோசடி,கொவிட் மோசடி போன்ற பாரியளவிலான ஊழல்,மோசடிகளுக்கு அரசாங்கம் பொறுப்பேற்க வேண்டும் என்றும் கூறினார். தற்போது இலங்கையின் ஊழல் விவகாரத்தில் மிகவும் கீழ்தரமான நிலைக்கு நாடு தள்ளப்பட்டுள்ளதாகவும் கூறினார்.