web log free
September 05, 2025

'பொறுப்புக்கூறல் இல்லாமல் நிலையான அமைதி ஏற்படாது'

நீதியும் பொறுப்புக்கூறலும் இல்லாமல் இலங்கையில் நிலையான அமைதி ஏற்படாது என்று பிரித்தானிய வெளிவிவகாரச் செயலாளர் ஜெர்மி ஹன்ட் தெரிவித்துள்ளார்.

இலங்கை விவகாரம் தொடர்பாக பிரித்தானிய நாடாளுமன்றத்தில் நேற்று எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.

பாரிய மனித உரிமை மீறல் குற்றவாளிகளை நீதியின் முன்நிறுத்த தவறும் இலங்கை மீது எடுக்கும் நடவடிக்கைகள் குறித்து பிரித்தானிய நாடாளுமன்றத்தில், கரேத் தோமஸ் என்ற உறுப்பினர், கேள்வி எழுப்பியிருந்தார்.

அதற்குப் பதிலளித்து உரையாற்றிய பிரித்தானிய வெளிவிவகாரச் செயலாளர் ஜெர்மி ஹன்ட், இதுபற்றி இந்த நாட்டில் வாழும் இலங்கை சமூகத்தினர் பலர் அக்கறை கொண்டுள்ளனர் என்று கூறியுள்ளார்.

அத்துடன், ஒட்டுமொத்தமாக பார்க்கும் போது, இலங்கையில் பத்தாண்டுகளுக்கு முன்னர் இருந்ததை விட இப்போது நல்ல நிலைமை காணப்படுகிறது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எவ்வாறாயினும், நடந்த தவறுகள் தொடர்பான நீதியும், பொறுப்புக்கூறலும் இல்லாமல் அங்கு நிலையான அமைதி சாத்தியப்படாது என, அவர் குறிப்பிட்டுள்ளார்.

Last modified on Wednesday, 11 September 2019 01:49
© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd