web log free
March 28, 2024

புதிய அமைச்சரவை தொடர்பில் ஜனாதிபதி பிடிவாதம்! புதியவர்கள் பலருக்கு அமைச்சு பதவி

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் நேற்று சனிக்கிழமை மாலை ஜனாதிபதி மாளிகையில் ஆரம்பமான முன்னாள் அமைச்சர்களுக்கிடையிலான கலந்துரையாடல் மூன்று மணித்தியாலங்களுக்கு மேலாக நீடித்தது.

ஆசியன் மிரருக்கு கிடைத்துள்ள தகவல் படி புதிய அமைச்சரவை நியமனம் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டதுடன், இளம் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அமைச்சரவை அமைச்சுக்களை வழங்கி அமைச்சரவையை நியமிக்க தயாராகி வருவதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

அமைச்சரவையில் முன்னாள் அமைச்சர்களுக்கு அமைச்சுப் பதவி வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டதால் அமைச்சுப் பதவிகள் வேண்டாம் என முன்னாள் அமைச்சர்களான காமினி லொகுகே, பிரசன்ன ரணதுங்க, பந்துல குணவர்தன, மஹிந்தானந்த அளுத்கமகே ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

எவ்வாறாயினும், அனுபவம் அற்றவர்களுக்கு  அமைச்சரவை அமைச்சுக்களை வழங்குவது அரசாங்கத்திற்கு சிக்கலை ஏற்படுத்தும் என சில அமைச்சர்கள் தெரிவித்துள்ளனர்.

எனினும் இளம் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அமைச்சுப் பதவிகளை வழங்கி அரசாங்கத்தை முன்னெடுத்துச் செல்வதே ஜனாதிபதியின் நிலைப்பாடாகும்.

20 அமைச்சரவை அமைச்சர்கள் கொண்ட அமைச்சரவை நியமிக்கப்பட உள்ளதாக தெரியவந்துள்ளது. 10 சிரேஷ்ட அமைச்சர்களும் பத்து புதிய பாராளுமன்ற உறுப்பினர்களும் அமைச்சுப் பதவிகளுக்கு நியமிக்கப்படவுள்ளனர்.

இதேவேளை, அமைச்சர் பதவிக்கு முன்னாள் அமைச்சர்கள் பலர் விண்ணப்பித்துள்ளதாக ஜனாதிபதி மாளிகை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அதன்படி புதிய அமைச்சரவை எதிர்வரும் 18ஆம் திகதி பதவிப்பிரமாணம் செய்து கொள்ளவுள்ளதாக ஜனாதிபதி மாளிகை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.