web log free
April 26, 2024

அமைச்சர்கள், எம்பிக்களின் சம்பளத்தில் கை வைத்தார் பிரதமர் ரணில்!

புதிய அமைச்சரவை அமைச்சர்களின் சகல சம்பளங்களும் இடைநிறுத்தப்படவுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர்களின் சில சிறப்புரிமைகள் துண்டிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

இன்று பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே பிரதமர் இதனை தெரிவித்தார்.

பிரதமர் அலுவலகத்தின் செலவுகளை 50 சதவீதம் குறைக்க ஏற்கனவே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அன்றாடத் தேவைகளுக்கான நிதி திறைசேரியில் இல்லை என்றும், அதற்குத் தேவையான நிதியை உடனடியாகக் கண்டறிய வேண்டும் என்றும் பிரதமர் கூறினார்.

தற்போதைய நெருக்கடியானது இலங்கையை மட்டும் பாதிக்கும் பிரச்சினையாக இல்லாமல் உலகளாவிய உணவு நெருக்கடியாக மாறும் தருவாயில் இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

அரச சேவையின் அத்தியாவசியமற்ற ஊழியர்கள் நாளை கடமைக்கு சமூகமளிக்க வேண்டிய அவசியமில்லை என தெரிவித்த அவர், எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் போக்குவரத்து சிரமங்களை கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.