web log free
April 25, 2024

'தனித்து போட்டியிட்டால் வெற்றிப்பெற முடியாது'

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை போலவே பொதுஜன பெரமுனவும் நாடாளுமன்றம் மற்றும் ஜனாதிபதி தேர்தலில் தனித்து போட்டியிட்டால் தோல்வியடையும் என, நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

அத்துடன், ஐக்கிய தேசியக் கட்சியை வீழ்த்த வேண்டுமாயின் பலமான கூட்டணி உருவாக்கப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் கூறுகையில், “ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஒத்துழைப்பற்ற தன்மையின் காரணமாக பொதுஜன பெரமுனவின் ஒரு தரப்பினர் கூட்டணியமைப்பது பயனற்றது என்ற நிலைப்பாட்டில் உள்ளார்கள்.

இரு தரப்பினரது பலவீனமான செயற்பாடுகளும் ஐக்கிய தேசிய கட்சிக்கே பலமானதாக காணப்படும். இரு தரப்பிலும் காணப்படுகின்ற போட்டித்தன்மையினால் தனித்து போட்டியிடுவது சிறந்தது என்று குறிப்பிடுவது தற்போதைய அரசியல் சூழ்நிலைக்கு சாத்தியமற்றது.

ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியினால் தனித்து போட்டியிட்டு ஒருபோதும் வெற்றிப் பெறமுடியாது. சுதந்திர கட்சியின் பலத்தினை கடந்த உள்ளுராட்சி பெறுபேறுகளின் ஊடாக புரிந்துக் கொள்ளாம்.

ஐக்கிய தேசிய கட்சியினை வீழ்த்த வேண்டுமாயின் இருதரப்பினரும் விட்டுக்கொடுப்புகளுடன் இணக்கமாக செயற்பட வேண்டும்” என்றும் கூறியுள்ளார்.