web log free
May 20, 2024

பிரித்தானிய பெண்ணை கைது செய்து நாடு கடத்த உத்தரவு

காலி முகத்திடல் போராட்டத்தில் ஈடுபட்டதன் மூலம் விசா நிபந்தனைகளை மீறிய குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டு நாட்டை விட்டு வெளியேறுமாறு உத்தரவிடப்பட்டுள்ள போதிலும் தலைமறைவாக உள்ள பிரித்தானிய இளம் பிரஜையை உடனடியாக கைது செய்து மிரிஹான தடுப்பு முகாமுக்கு அனுப்புமாறு குடிவரவு அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இது பாதுகாப்பு அமைச்சகம் வழங்கிய அறிவுறுத்தல்களின் அடிப்படையில் செயற்படுத்தப்பட்டுள்ளது.

குடிவரவு குடியகழ்வு திணைக்களத்தின் உதவியுடன் அவரைக் கண்டுபிடிக்க குற்றப் புலனாய்வுப் பிரிவினரும் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

பிரித்தானியக் குடியுரிமை பெற்றுள்ள  கெல்லி ஃபேசர், தனது மீதான விசா மீறல் குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டதையடுத்து, எதிர்வரும் 15ஆம் திகதிக்கு முன்னர் நாட்டை விட்டு வெளியேறுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த வெளிநாட்டவர் மற்றும் அவருக்கு இந்த நாட்டில் இருந்து உதவி செய்யும் உயர் அதிகாரிகள் பற்றிய மறைக்கப்பட்ட தகவல்கள் ஏற்கனவே வெளியாகி வருவதாக மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

அவர் கைது செய்யப்பட்ட பின்னர், அவர் வெளிநாடு செல்வதற்கான விமான டிக்கெட்டை பெறும் வரை மிரிஹான குடிவரவு முகாமில் தடுத்து வைக்குமாறும், கறுப்புப் பட்டியலில் சேர்த்து நாடு கடத்தப்படுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளார்.