web log free
April 26, 2024

ராமேஸ்வரம் மீனவர்கள் 6 பேர் விடுதலை

தலைமன்னார் கடற்பரப்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த இந்திய மீனவர்கள் 6 பேரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

மன்னார் நீதவான் நிரஞ்சனி முரளிதரன் முன்னிலையில் மீனவர்கள் 6 பேரும் ஆஜர்படுத்தப்பட்டனர்.

இதன்போது, 10 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட மூன்று வருட சிறைத்தண்டனை என்ற நிபந்தனையின் அடிப்படையில் மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

இந்திய துணைத் தூதரகத்தின் உதவியுடன் மிரிஹான முகாமிற்கு அழைத்துச்சென்று, அங்கிருந்து தமிழகத்திற்கு மீனவர்களை அனுப்ப நடவடிக்கை எடுக்குமாறு குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்திற்கு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

மீனவர்களிடம் பறிமுதல் செய்யப்பட்ட படகிற்கான உரிமை கோரிக்கை வழக்கு எதிர்வரும் மார்ச் மாதம் 30ஆம் திகதி நடைபெறவுள்ளது.

அன்றைய தினம் உரிமையாளரால், உரிமை கோரிக்கை முன்வைக்கப்படாவிடில் படகு அரசுடமையாக்கப்படும் என நீதவான் உத்தரவிட்டார்.

SEA OF SRI LANKA எனப்படும் இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி பிரவேசித்தமை தொடர்பில், கடந்த ஆகஸ்ட் மாதம் 28ஆம் திகதி தலைமன்னார் கடற்பரப்பில் இந்திய மீனவர்கள் 6 பேரும் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.