web log free
April 19, 2024

முக்கிய சில முடிவுகளை எடுக்கும் நோக்கில் நாளை கட்சித் தலைவர்கள் கூட்டம்

பாராளுமன்ற விவகாரங்களுக்கான குழுவின் (கட்சித் தலைவர்) கூட்டம் நாளை (14) முற்பகல் 10.30 மணிக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் நடைபெறவுள்ளது.

பாராளுமன்றத்தில் அடுத்த வாரத்திற்கான நிகழ்ச்சி நிரலை தீர்மானிக்கும் நோக்கில் இந்த கூட்டம் நடைபெறவுள்ளதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்க தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றம் அடுத்த வாரம் 20 ஆம் திகதி முதல் 23 ஆம் திகதி வரை கூடவுள்ளது. இதேவேளை, அரசாங்கத்துடனும் சர்வதேச நாணய நிதியத்துடனும் ஊழியர் மட்ட ஒப்பந்தம் கைச்சாத்திடப்படுவது தொடர்பில் பாராளுமன்ற விவகாரக் குழுக் கூட்டத்தில் விவாதம் நடத்துமாறு சபாநாயகரிடம் கோரிக்கை விடுப்பதாக எதிர்க்கட்சியின் பிரதான அமைப்பாளர் சட்டத்தரணி லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

பொது விவகாரங்களுக்கான நாடாளுமன்றக் குழு, பொதுக் கணக்குகளுக்கான நாடாளுமன்றக் குழு உள்ளிட்ட பல குழுக்கள் இன்னும் அமைக்கப்பட உள்ளன. இந்த குழுக்களை அமைப்பது குறித்தும் இங்கு ஆலோசிக்கப்படும் என்று தெரிய வந்துள்ளது.