web log free
April 20, 2024

தமிழ் கட்சிகளுடன் பேசி தேசிய பிரச்சினைக்கு விரைவில் தீர்வு

முப்பது வருடகால யுத்தத்தை இலங்கை வெற்றியுடன் முடிவுக்குக் கொண்டு வந்த நிலையில், தேசிய பிரச்சினைக்கான தீர்வுக்காக, தமிழ் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி இன்னும் சில மாதங்களில் தீர்வு காணப்படும் என நம்புவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, தெரிவித்தார்.

கொள்ளுப்பிட்டி தேசிய பாதுகாப்பு கல்லூரியின் முதலாவது பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இந்து சமுத்திர பிராந்தியத்தில் இலங்கை இராணுவ நடவடிக்கைகளில் ஒருபோதும் ஈடுபடாது என்று தெரிவித்த ஜனாதிபதி, இலங்கையில் உள்ள அனைத்து துறைமுகங்களும் வர்த்தக நோக்கங்களுக்காக மட்டுமே பயன்படுத்தப்படுவதாகவும் சுட்டிக்காட்டினார்.

அம்பாந்தோட்டை துறைமுகத்தில் கடன் முகாமைத்துவ செயற்பாடாக மாத்திரமே சீனாவுக்கு பங்குகள் உள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.