web log free
April 16, 2024

ஜனாதிபதி ஊடகப் பிரிவு விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு

வறுமைக் காரணமாக மாணவத் தலைவி ஒருவர் மதிய உணவுக்கு தேங்காய்த் துண்டுகளை பாடசாலைக்கு எடுத்து வந்ததாக தேசிய பத்திரிகைகள் மற்றும் சமூக ஊடகங்களில் வெளியான செய்தி தொடர்பில் ஜனாதிபதி அலுவலகம் கவனம் செலுத்தியுள்ளது.

இதனையடுத்து குறித்த செய்தி தொடர்பில் தகவல்களைப் பெற ஜனாதிபதி அலுவலகம் நடவடிக்கை எடுத்தது.

இதன்படி, மினுவாங்கொடை பிராந்திய பணிப்பாளர் வஜிர ரணராஜா, கம்பஹா மாவட்ட செயலாளர் டபிள்யூ. சத்தியானந்த, திவுலப்பிட்டிய பிரதேச செயலாளர், மினுவாங்கொடை கல்வி வலய திவுலப்பிட்டி கல்விப் பிரிவின் பணிப்பாளர், கொங்கொடமுல்ல புனித அந்தோனியார் கனிஷ்ட கல்லூரியின் அதிபர் ஆகியோரிடமிருந்து தகவல்கள் பெற்றப்பட்டன.

அத்துடன், மாணவி வாழும் பிரதேச கிராம உத்தியோகத்தர் மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர் ஆகியோரிடம் இருந்தும் தகவல்கள் பெறப்பட்டன.

எனினும், இந்தத் தகவல்களின்படி அவ்வாறானதொரு சம்பவம் எதுவும் அப்பகுதியில் பதிவாகவில்லை என்று உறுதியாகியுள்ளது.

எவ்வாறாயினும், தற்போதைய பொருளாதார நிலைமைக் காரணமாக உணவு நெருக்கடி ஏற்பட்டால் இதற்கான மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

எந்தவொரு குழந்தையோ, நபரோ அல்லது குடும்பமோ உணவு நெருக்கடிக்கு உள்ளானால் இதற்குத் தீர்வு காண விசேட வேலைத்திட்டமொன்று பிரதேச செயலகங்கள் மற்றும் மாவட்ட செயலகங்கள் மட்டத்தில் ஏற்கனவே நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

அத்துடன் ஜனாதிபதியின் விசேட பணிப்புரையின் பேரில் ஜனாதிபதி அலுவலகத்தில் உணவுப் பாதுகாப்புத் திட்டப் பிரிவொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

011 4354647 மற்றும் 011 4354354 ஆகிய தொலைபேசி இலக்கங்களுக்கு அழைத்து 5705 / 5707 ஆகிய நீட்டிப்பு இலக்கங்களின் ஊடாக ஜனாதிபதி அலுவலகத்திற்கு இது தொடர்பான தகவல்களை வழங்க முடியும்.

உலக உணவுத் திட்டத்தின் கீழ் உதவி பெறத் தகுதியான அளவுகோல்களைக் கொண்ட தரப்பினராக 05க்கும் மேற்பட்ட உறுப்பினர்களைக் கொண்ட சமுர்த்தி

பயனாளிகளது குடும்பங்கள், ஊனமுற்றோர் மற்றும் நாட்பட்ட நோயாளர்களைக் கொண்ட குடும்பங்கள், 05 வயதுக்குட்பட்ட குழந்தைகளைக் கொண்ட ஏழ்மையான குடும்பங்கள், கணவன் அல்லது மனைவி இல்லாத குடும்பங்கள், கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களைக் கொண்ட குடும்பங்கள், ஆரம்பக் கல்வி கூட பெறாத ஏழைக் குடும்பங்கள், கடுமையான உணவுப் பற்றாக்குறையுள்ள குடும்பங்கள் மற்றும் கடுமையான உணவுப் பஞ்சத்தில் இருக்கும் குடும்பங்கள் என்பன அடையாளம் காணப்பட்டுள்ளன.

இவ்வாறான குடும்பங்களுக்கு உலக உணவுத் திட்டத்தின் கீழ் மாதாந்தம் 15,000 ரூபாவை கிராம உத்தியோகத்தர்கள் மற்றும் பிரதேச செயலாளர்கள் ஊடாக வழங்க முடியும். அதற்கமைய முதல் 03 மாதங்களுக்கு பணம் வழங்கப்படுவதுடன் மேலும் 06 மாதங்களுக்கு உணவு வழங்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது.

இது தவிர மாதந்தோறும் 10,000 ரூபா வீதம் 6 மாதங்கள் வரை கொடுப்பனவு வழங்க அரசாங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவற்றில் உள்ளடங்காத மற்றும் தற்சமயம் உணவு கிடைக்காமல் தவிக்கும் குடும்பங்கள் இருப்பின் அவர்களுக்கு குறுகிய காலத்தில் உணவு வழங்க வாய்ப்பு உள்ளது. கிராம அலுவலர்கள், பிரதேச செயலாளர்கள் ஊடாக ஜனாதிபதி செயலகத்தின் உணவு பாதுகாப்பு திட்டப் பிரிவுக்கு கோரிக்கை முன்வைக்க வேண்டும்.

மேலும், ஊட்டச்சத்து குறைபாடுள்ள மாணவர்களைக் கொண்ட குடும்பங்கள் இருந்தால், அது தொடர்பில் ஆய்வுகள் நடத்தப்பட்டு, அத்தகைய குடும்பங்களுக்கு அரசாங்கம் செயல்படுத்தி வரும் பெற்றோர் பாதுகாவலர் திட்டங்கள் மூலம் உணவு உதவித் திட்டங்கள் வழங்கப்படும்.

மேலும், உணவின்றி தவிக்கும் குடும்பங்கள் பற்றிய தகவல்களை பாடசாலை ஆசிரியர்களும் சேகரித்து, ஜனாதிபதி அலுவலகத்திற்கு அனுப்ப முடியும். அத்தகைய குடும்பங்களுக்கு உதவ விரும்புபவர்களும் இதில் இணைந்து உதவி வழங்க முடியும்.

அதுமட்டுமின்றி கிராம உத்தியோகத்தர்கள் மற்றும் பிரதேச செயலாளர்கள் ஜனாதிபதி அலுவலகத்துடன் தொடர்பு கொண்டு இந்த வேலைத்திட்டங்களை செயற்படுத்துவதற்கு பங்களிப்புச் செய்ய முடியும்.