web log free
May 08, 2025

22ம் திருத்த சட்டத்திற்கு யார் தடை? வெளிப்படுத்துகிறார் அமைச்சர்

22வது அரசியலமைப்பு திருத்தத்தை கொண்டு வருவதற்கு சட்ட வரைவு திணைக்களம் பல ஆதரவை வழங்கிய போதிலும், ஏனைய சக்திகளின் செயற்பாடு காரணமாக அதனை நிறைவேற்றிக்கொள்ள முடியவில்லை என நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 

சட்ட வரைவுத் திணைக்கள அதிகாரிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில்  திணைக்கள கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற சிநேகபூர்வ சந்திப்பிலேயே இந்தக் கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டன.

நாட்டின் மிக அத்தியாவசியமான நிறுவனங்களில் ஒன்றாக வரைவுத் திணைக்களத்தின் தரத்தை உயர் மட்டத்திற்கு கொண்டு வருவதற்கு தாம் செயற்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

சட்டம் இயற்றும் பணியில் திரைமறைவில் முக்கியப் பங்கு வகிக்கும் மிகப்பெரிய நிறுவனமாக சட்ட வரைவுத் துறை ஆற்றி வரும் சேவை பாராட்டுக்குரியது என்றும், அந்தத் துறை அலுவலர்கள் வீடுகளில் இருந்தும் ஆற்றி வரும் சேவை பாராட்டத்தக்கது என்றும் அவர் கூறினார். 

தற்போது நாடு எதிர்நோக்கும் பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுக்கும் வகையில் நிதித் தீர்மானங்களை எடுப்பது மிகவும் கடினமாக இருந்தாலும், சட்ட வரைவுத் திணைக்களம் எதிர்நோக்கும் பொதுவான பிரச்சினைகளை கண்டறிந்து அதற்கான தீர்வுகளை வழங்க நடவடிக்கை எடுத்து வருவதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

வரைவுத் துறையில் பணியாற்ற எதிர்பார்க்கும் சட்டத்தரணிகள் மற்றும் உத்தியோகத்தர்களுக்கு மேலதிக அறிவையும் புரிதலையும் வழங்கும் நோக்கில் சட்ட வரைவு தொடர்பான டிப்ளோமா மற்றும் முதுகலை படிப்புகளை பல்கலைக்கழக மட்டத்தில் அறிமுகப்படுத்துவது மிகவும் முக்கியமானது என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார். 

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd