web log free
April 25, 2025

டயானா கமகேவிற்கு தடை நீடிப்பு

இராஜாங்க அமைச்சர் டயனா கமகேவுக்கு விதிக்கப்பட்ட பயணத் தடையை எதிர்வரும் 15ஆம் திகதி வரை நீடிக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் நந்தன அமரசிங்க இன்று (17) உத்தரவிட்டுள்ளார்.

இந்த முறைப்பாடு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, ​​டயனா கமகே சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி சரத் ஜயமான்ன, வழக்குக்கு தொடர்பில்லாத வெளி தரப்பினர் வந்து தமது கட்சிக்காரருக்கு எதிராக பயணத்தடை பெற்றுள்ளதாக நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

வழக்கில் சம்மந்தப்படாத வெளி தரப்பினரால் அவ்வாறான உத்தரவைப் பெற முடியாது என ஜனாதிபதி சட்டத்தரணி தெரிவித்தார்.

எனவே வெளிநாட்டுப் பயணத்திற்கான தடையை நீக்குமாறு நீதிமன்றில் கோரிக்கை விடுத்துள்ளார்.

மனுதாரர் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி றியன்சி அர்சகுலரத்ன மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் செயலாளர் நாயகம் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகளும் இந்தக் கோரிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்தனர்.

முன்வைக்கப்பட்ட சமர்ப்பணங்களை பரிசீலித்த நீதவான், இந்தக் கோரிக்கை மீதான உத்தரவு எதிர்வரும் 15ஆம் திகதி அறிவிக்கப்படும் எனத் தெரிவித்தார்.

அதுவரை பயணத்தடை நீடிக்கப்படும் எனவும் நீதவான் குறிப்பிட்டுள்ளார்.

டயனா கமகேவின் கடவுச்சீட்டு, பிறப்புச் சான்றிதழ் மற்றும் தேசிய அடையாள அட்டை போலியானது என சமூக ஆர்வலர் ஓஷல ஹேரத் தாக்கல் செய்த முறைப்பாடு விசாரணைக்கு அழைக்கப்பட்ட போதே இந்த சமர்ப்பணங்கள் முன்வைக்கப்பட்டன.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd