மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட பதற்றநிலை தற்போது முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும், அது நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட சம்பவத்தை விட முற்றிலும் வேறுபட்ட தன்மையுடையது என்றும் நீதியமைச்சர் ஹர்ஷண நாணயக்கார தெரிவித்துள்ளார்.
அமைச்சர் கூறுகையில், நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்டது கைதிகளின் இரண்டு குழுக்களுக்கு இடையிலான மோதலாக இருந்த நிலையில், மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட சம்பவம் சிறைச்சாலை நிர்வாகத்திற்கு எதிராக இடம்பெற்றதாகத் தெரிகிறது என்றார்.
சிறைச்சாலைகளுக்குள் போதைப்பொருட்கள் உள்ளிட்ட சட்டவிரோத பொருட்கள் நுழைவதைத் தடுக்க அரசு மேற்கொண்டுள்ள கடுமையான நடவடிக்கைகள் காரணமாக உருவான அதிருப்தி மற்றும் கோபமே இந்த பதற்றநிலைக்கு காரணமாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
“அனைத்து சிறைச்சாலைகளிலும் போதைப்பொருட்கள் உள்ளே செல்லாமல் தடுக்க திட்டமிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதற்கெதிரான அதிருப்தி மற்றும் எதிர்ப்பே இத்தகைய நிலையை உருவாக்கியிருக்கலாம். ஆரம்பகட்ட விசாரணை அறிக்கை கிடைத்த பின்னர் இதுகுறித்து உறுதியாக கூற முடியும்,” என அமைச்சர் தெரிவித்தார்.
தற்போது சிறைச்சாலையின் பாதுகாப்பிற்காக பொலிஸாரும் விசேட அதிரடிப்படையினரும் (STF) தொடர்ந்து பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன், சேதமடைந்த சொத்துகளை சீரமைக்கும் பணிகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
கைதிகள் அனைவரும் தங்களது சிறைக்கூடங்களுக்கு மீண்டும் அனுப்பப்பட்டுள்ளதுடன், அவர்களுக்கு தேவையான உணவு மற்றும் அத்தியாவசிய வசதிகள் வழங்கப்பட்டு, சிறைச்சாலையின் அன்றாட நடவடிக்கைகளை வழமை நிலைக்குக் கொண்டுவர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
இந்த சம்பவம் தொடர்பாக ஆரம்பகட்ட அறிக்கை கோரப்பட்டுள்ளதாகவும், சம்பவத்தில் ஒரு கைதி உயிரிழந்துள்ளதால் அதுகுறித்த சட்ட நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
முழுமையான விசாரணை அறிக்கை கிடைத்த பின்னர் சம்பவம் தொடர்பான மேலதிக தகவல்கள் வெளியிடப்படும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.




