இலங்கை பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷவை இன்று (04) இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழு முன்னிலையில் ஆஜராகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்காக அகலமான உடற்பகுதியைக் கொண்ட விமானங்களை உள்ளடக்கிய விமானப் படையை நிறுவும் நடவடிக்கையின்போது இடம்பெற்றதாகக் கூறப்படும் இலஞ்சப் பெறுதல் சம்பவம் தொடர்பில் முன்னெடுக்கப்படும் விசாரணைக்கு அமைவாக இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்படி, இன்று வெள்ளிக்கிழமை காலை 9.00 மணிக்கு இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு முன்னிலையில் ஆஜராகுமாறு நாமல் ராஜபக்ஷவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக அவரது சட்டத்தரணி முதித ஆர். லொக்குமுதலி தெரிவித்துள்ளார்.
இதற்கு முன்னதாக, கடந்த திங்கட்கிழமை ஆணைக்குழு முன்னிலையில் ஆஜராகுமாறு நாமல் ராஜபக்ஷவுக்கு அறிவிக்கப்பட்டிருந்தது.
எனினும், அதற்கு அடுத்த நாள் ஆஜராக முடியும் என அவர் ஆரம்பத்தில் அறிவித்திருந்ததாகவும், பின்னர் தனது சட்டத்தரணி ஊடாக கடிதமொன்றை அனுப்பி, செப்டம்பர் 25ஆம் திகதிக்குப் பின்னர் வேறு ஒரு திகதியை வழங்குமாறு கோரியிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
எனினும், அவரது கோரிக்கையை இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு நிராகரித்துள்ளதாகவும், செப்டம்பர் 04ஆம் திகதி ஆணைக்குழு முன்னிலையில் ஆஜராகுமாறு மீண்டும் அறிவித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.




