மத்திய கிழக்கில் நிலவும் மோதல்கள் காரணமாக எரிபொருள் இறக்குமதிக்கான செலவுகள் அதிகரித்துள்ள நிலையில், தனியார் எரிபொருள் நிறுவனங்களுக்கான எரிபொருள் விலைகளைத் திருத்துவது குறித்து அரசாங்கம் பரிசீலிக்கலாம் என எரிசக்தி அமைச்சர் அனுர கருணாதிலக்க தெரிவித்துள்ளார்.
தனியார் நிறுவனங்களுடன் மேற்கொள்ளப்பட்டுள்ள ஒப்பந்தங்களின் அடிப்படையில், இவ்வாறான விலைத் திருத்தத்தை மேற்கொள்வதற்கு சட்டரீதியான தடைகள் எதுவும் இல்லை எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, மத்திய கிழக்கு மோதல்களால் கடல் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதால் இறக்குமதி செலவுகள் கணிசமாக அதிகரித்துள்ளதாகவும், தற்போதைய விலைகளில் எரிபொருளை விற்பனை செய்வது கடினமாகியுள்ளதாகவும் தனியார் எரிபொருள் நிறுவனங்கள் அரசாங்கத்திடம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
IOC, Sinopec மற்றும் RM Parks உள்ளிட்ட தனியார் எரிபொருள் விநியோக நிறுவனங்கள் இந்த விடயத்தை அரசாங்கத்தின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளதாக சிரேஷ்ட அரச அதிகாரி ஒருவர் உறுதிப்படுத்தியுள்ளார்.
எவ்வாறாயினும், தற்போதைய சூழ்நிலையில் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (CPC) விற்பனை செய்யும் எரிபொருளின் அதிகரித்த செலவை முழுமையாக நுகர்வோர் மீது சுமத்த அரசாங்கம் எதிர்பார்க்கவில்லை எனவும் அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.




