இதுவரை தோட்டத் தொழிலாளர்களுக்கு 10 பைசா கூட சம்பளம் பெற்றுக் கொடுக்காமல் சந்தா மாத்திரம் பெற்றுக் கொண்டு இருக்கின்ற ஜனநாயக மக்கள் முன்னணி கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் சம்பள உயர்வை பற்றி விமர்சிப்பது என்பது பசுத்தோல் போர்த்திய நரி போல உள்ளதாக முன்னாள் அமைச்சரும் இ.தொ.காவின் போசகருமான ஜெகதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்,
தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்க கூடாது என்று சம்பள பேச்சுவார்த்தைக்கு செல்லாத கம்பனிகளை விமர்சனம் செய்யாமல், இ.தொ.கா சம்பள பேச்சுவார்த்தைக்கு செல்லாதது போல இ.தொ.காவை விமர்சிப்பது என்பது இவர் ஒரு மன நோயாளி போல காணக்கூடியதாக உள்ளது.
வேலுகுமார் அரசியலுக்கு வந்து கிட்டத்தட்ட 10 வருடங்களுக்கு மேல் ஆகியுள்ளது. ஒரு தொழிற் சங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் இவர் தோட்ட தொழிலாளர்களுக்காக இதுவரை 10 பைசா கூட சம்பள உயர்வு பெற்றுக் கொடுத்தது இல்லை என்பதை நினைக்கும் போது இவருக்கு வாக்களித்த மக்களை எண்ணி வேதனை அடைகிறேன்.
2015 முதல் 2019 வரை வேலுகுமார் ஆளுங்கட்சி பாராளுமன்ற உறுப்பினராக இருந்த போதும், அரசாங்கத்தில் எந்த அமைச்சு பதவிகளும் வேலுகுமாருக்கு வழங்கப்படவில்லை. எதிர்க்கட்சியில் இருந்த போது அமைச்சு பதவிக்கு ஆசைப்பட்டு தனது கட்சியின் கொள்கையை மீறி அரசாங்கத்திற்கு ஆதரவாக வாக்களித்தும் அவருக்கு அமைச்சு பதவிகள் வழங்கப்படவில்லை. அவருடைய தகுதி ஆராயப்பட்டே அவருக்கு அமைச்சு பதவிகள் வழங்கப்படவில்லை என்பதை இந்நேரத்தில் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
வேலுகுமார் பல முறை ஜானதிபதியை ரகசியமாக சந்தித்து , தனது ஆசையை நிறைவேற்ற முயற்சித்த போதிலும் அது பயனளிக்கவில்லை என்பதால், இ.தொ.கா அரசாங்கத்தில் பதவி வகிப்பதை கண்டு மன விரக்தியில் குழப்பி கொண்டிருக்கிறார்.
தோட்ட தொழிலாளர்களிடம் சந்தாவை பெற்றுக் கொண்டு, 10 பைசா கூட சம்பள உயர்வு பெற்றுக் கொடுக்காத கட்சி தான் வேலுகுமார் பிரதிநிதித்துவப்படுத்தும் ஜனநாயக மக்கள் முன்னணி. இதை மூடி மறைத்து விட்டு அன்று முதல் இன்று வரை இ.தொ.க பெற்றுக் கொடுத்த சம்பளத்தில் சந்தா பெற்றுக் கொள்கிறார்.
இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமானின் முயற்சியால் பல தொழிற்சங்க பிரச்சினைகள் முடிவுக்கு கொண்டு வரப்பட்ட்டுள்ளது. அதேபோல் இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமானின் தொடர்ச்சியான சம்பள உயர்வு தொடர்பான ஊடக சந்திப்புகளின் போது, தோட்ட தொழிலாளர்களுக்கு விரைவில் நியாமான சம்பள உயர்வு கிடைக்கும் எனவும், அதற்கான முழுப் பொறுப்பையும் தான் ஏற்றுக் கொள்வதாகவும், அதற்கான அனைத்து வேலைத்திட்டத்தை அன்று முதல் இன்று வரை அவர் செய்து வருகிறார்.
மறைந்த தலைவர் ஆறுமுகன் தொண்டமானின் தலைமையிலான சம்பள பேச்சுவார்த்தைகளின் போது அவருடைய பின்புலத்தில் இருந்த உயர்மட்ட குழுவில் இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான், தவிசாளர் இராமேஸ்வரன் ஆகியோரும் அங்கம் வகித்தனர். ஆறுமுகன் தொண்டமானின் மறைவுக்கு பிறகு அதே நிதானத்துடன் செயற்படுவதோடு சம்பளம் பெற்றுக்கொடுப்பதில் பின்வாங்காமல் செயற்படுகிறார். அவருடைய அரசியல் அனுபவத்தின் ஊடாக தோட்ட தொழிலாளர்களுக்கு விரைவாக சம்பளம் பெற்றுகொடுப்பர் என்பதில் மாற்றுக் கருத்து கிடையாது என ஜெகதீஸ்வரன் தெரிவித்தார்.
இ.தொ.கா பொதுச் செயலாளர் ஜீவன் தொண்டமான் சம்பளம் அதிகரிக்க வேண்டும் என்பதில் தொடர்ந்தும் அழுத்தம் கொடுத்து வருகிறார். சம்பள நிர்ணய சபை கூடும் திகதியை அடிப்படையாக வைத்து 30 நாட்களுக்குள் சம்பள உயர்வை பெற்றுக் கொடுத்து விடலாம் என்ற நம்பிக்கையில் சம்பள உயர்வு பெற்றுத் தரப்படும் என தெரிவித்திருந்தார். தற்போது அது 10 அல்லது 20 நாட்களுக்கு தள்ளிப்போகும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்தது ஒன்றும் உலக மகா குற்றம் கிடையாது.
அவ்வாறு இருக்கும் நிலையில், கடந்த காலங்களில் தோட்ட தொழிலாளர்களுக்கு 1000 சம்பளம் பெற்றுக்கொடுக்க வேண்டும் என இ.தொ.கா எதிர் கட்சியில் இருந்து போராடி கொண்டிருக்கும் போது, வேலுகுமார் ஆளும் கட்சியில் 5 வருடம் இருந்து 10 பைசா கூட சம்பள உயர்வு பெற்று கொடுக்கவில்லை என்பது ஊர் அறிந்த உண்மை.
நான் மறைந்த தலைவர் சௌமியமூர்த்தி தொண்டமான்,ஆறுமுகன் தொண்டமான் ஆகியோருடன் பல கூட்டு ஒப்பந்தத்தில்,சம்பள பேச்சுவார்த்தையில் கலந்துக் கொண்டுள்ளேன். இ.தொ.கா ஒவ்வொரு சம்பள பேச்சுவார்த்தையின் போதும் கடுமையான வாக்குவாதம், போராட்டம் செய்தே சம்பள உயர்வு பெற்றுக் கொடுத்துள்ளது. இ.தொ.காவை பொறுத்த மட்டில் ஆறுமுகன் தொண்டமான் மறைந்த போதிலும் அவர் முன்வைத்த 1000 ரூபாவை இ.தொ.கா பெற்றுகொடுத்தது. அதேபோல் தற்போது இ.தொ.கா முன்வைத்த கோரிக்கையை இ.தொ.கா பெற்றுக்கொடுக்கும்.
வேலுகுமார் பெருந்தோட்ட கம்பனிகளின் தரகராக செய்ற்பட்டு, அதிக சம்பளம் தராத கம்பனிகளின் மீது மக்கள் கொண்டுள்ள வெறுப்பை இ.தொ.கா மீது திசை திருப்ப முயற்சிக்கிறார். 10 பைசா வேலுகுமார் கம்பெனிகளுக்கு எதிராக எந்த வித கருத்தும் தெரிவிக்கவில்லை. இதன்மூலம் இவர் கம்பனிகளுக்கு கைகூலியாக செயற்படுவதை அவருடைய அறிக்கையில் வெட்டவெளிச்சமாக காண முடிகிறது.
கம்பனிகளுக்கு மறைமுகமாக கைக்கூலி வேலைப்பார்த்து கொண்டிருக்கும் 10 பைசா வேலுகுமாருக்கு இந்த பதில் போதுமானது என நினைக்கிறேன். பசுத்தோல் போர்த்திய நரியான 10 பைசா வேலுகுமார் தன்னை நியாமானவராக இனி வரும் காலநகளில் வெளிக்காட்ட கம்பனிக்கு எதிராக இனி அறிக்கை வெளியிடுவார். வேலுகுமாரின் போலி நாடகம் இனி அரங்கேராது என தெரிவித்துள்ளதோடு என்னுடைய அரசியல் அனுபவத்தில் பாதியே வேலுகுமாரின் வயது. இவரை போல் பல கம்பனிகளின் கைகூலிகளை எனது வாழ்நாளில் சந்தித்துள்ளேன் எனவும்,வெறும் செயல் இன்றி வாயலே தனது வாழ்க்கையை ஓட்டிவிடுவார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் அமைதி வழியில் நடத்தப்படும் போராட்டங்களை நசுக்குவதை அரசாங்கம் உடனடியாக நிறுத்த வேண்டும் என சர்வதேச மன்னிப்புச் சபை வலியுறுத்தியுள்ளது.
2022 மார்ச் முதல் 2023 ஜூன் வரை இலங்கையில் நடைபெற்ற 30 போராட்டங்களில், போராட்டக்காரர்களுக்கு எதிராக பாதுகாப்புப் படையினர் அதிக பலத்தை பிரயோகித்ததாக சர்வதேச மன்னிப்பு சபையின் புதிய அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்த விடயம் தொடர்பில் அரசாங்கம் உரிய விசாரணைகளை மேற்கொள்ளத் தவறியுள்ளதாக சர்வதேச மன்னிப்புச் சபை குறிப்பிட்டுள்ளது.
சட்டவிரோத பலவந்த பிரயோகத்திற்கு காரணமான அதிகாரிகளை நேரடி விசாரணைக்கு உட்படுத்தி சட்டத்தின் முன் நிறுத்தும் வரை இலங்கை அரசாங்கத்துடனான ஒத்துழைப்பை அவசரமாக மீளாய்வு செய்யுமாறு சர்வதேச மன்னிப்புச் சபை , சர்வதேச சமூகத்திடமும் கோரிக்கை விடுத்துள்ளது.
சித்திரை புத்தாண்டை முன்னிட்டு எதிர்வரும் 15 ஆம் திகதி திங்கட்கிழமையும் அரச விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் பிரதீப் யசரத்ன இதனை உறுதிப்படுத்தினார்.
தமிழ் சிங்களப் புத்தாண்டுக்கான சுபவேளை குறிப்புப் பத்திரம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் சம்பிரதாய முறைப்படி இன்று (10) ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து கையளிக்கப்பட்டது.
கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அரச சுபநேர கணிப்புக் குழுவினால் தயாரிக்கப்பட்ட சுபவேளை குறிப்புப் பத்திரமே இவ்வாறு ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது.
புத்தசாசன, சமய கலாசார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க சம்பிரதாய முறைப்படி ஜனாதிபதிக்கு வழங்கி வைத்தார்.
புத்தாண்டு பிறப்பு, புண்ணிய காலம், உணவு சமைத்தல், அடுப்பு பற்றவைத்தல், உணவு உண்ணல், தலைக்கு எண்ணெய் தேய்த்தல், புத்தாண்டில் வேலைக்குப் புறப்பட்டு செல்லுதல் உள்ளிட்ட சுப காரியங்களுக்கான சுப நேரங்கள் மேற்படி பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன.
தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க, ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் செயலாளர் சோமரத்ன விதானபத்திரன உள்ளிட்ட பலர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை தரை மட்டத்தில் பலப்படுத்தும் புதிய வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ரப்பக்ஷ தெரிவித்துள்ளார்.
இதன் முதற்கட்டமாக கட்சி உறுப்பினர்களுக்கு வீடு வீடாகச் சென்று விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டு, தங்காலை தொகுதியில் இருந்து ஆரம்பிக்கப்பட்டுள்ளது என்றார்.
எதிர்வரும் எந்தவொரு தேர்தலையும் எதிர்கொள்ளும் வகையில் கட்சிகள் பலப்படுத்தப்படும் என்றும் எம்.பி கூறினார்.
நாட்டின் பலம் வாய்ந்த கட்சியாக பொதுஜன பெரமுனவை நிலைநிறுத்துவதற்கு தாம் மிகுந்த அர்ப்பணிப்பை வழங்கவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
எதிர்வரும் சில மாதங்கள் முக்கியமானவை என்பதால், வெளிநாட்டுப் பயணங்களை உடனடியாகக் குறைக்குமாறு அரசாங்கத்தின் அமைச்சர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் ஆளும் கட்சி உறுப்பினர்கள் அரசியல் பணிகளுக்காக வரவேண்டியது அவசியம் என்பதால், முடிந்தவரை வெளிநாட்டுப் பயணங்களை மட்டுப்படுத்துமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆளும் கட்சி உறுப்பினர்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, எதிர்வரும் மே தின கூட்டத்தின் பின்னர் தேர்தலை இலக்கு வைத்து அரசியல் பணிகளை முடுக்கிவிடுமாறும், மே மாதம் ஜனாதிபதி தேர்தலை நேரடியாக இலக்கு வைத்து அரசியல் பணிகளை மேற்கொள்ளுமாறும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன், கட்சிகள் மற்றும் குழுக்களை ஒன்றிணைத்து பரந்த கூட்டணியை பிரதிநிதித்துவப்படுத்தி தேர்தலில் பங்குபற்றுவதற்கு ஜனாதிபதி திட்டமிட்டுள்ளதாக அரசாங்கத்தின் சிரேஷ்ட அமைச்சர் ஒருவர் தெரிவித்தார்.
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெளிநாடு செல்வது தொடர்பில் சந்தேகம் நிலவுவதாக சமகி ஜன பலவேகய பாராளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன தெரிவித்துள்ளார்.
ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்ட மைத்திரிபால சிறிசேன வெளிநாடு செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த அறிக்கை தொடர்பில் விசாரணை நடத்துமாறு கோரி குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் செய்யப்பட்ட முறைப்பாடு தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக பாராளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன இன்று (10) குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு விஜயம் செய்த போதே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
“முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஒருபுறம் ஈஸ்டரின் மூளையாக விளங்கி அதை மூடி மறைத்த குற்றமே மறுபுறம் பொய் சொன்னால் மரணத்திற்கு காரணமானவரை மறைக்க விசாரணையை திசை திருப்புவதாக சந்தேகிக்கிறோம். அவர் கூறிய கருத்திலிருந்து தப்பி ஓட முடியாது, ஆனால் அவர் அந்த அறிக்கைகளை மீண்டும் மீண்டும் மாற்றுவதை நாம் காண்கிறோம்.
மைத்திரிபால சிறிசேன நாட்டையும் சாப்பிட்டார். ஆட்களை சாப்பிட்டுவிட்டு இப்போது வாந்தி எடுக்க வேண்டியதாயிற்று. மைத்திரி நாட்டில் எத்தனையோ பிரச்சினைகளை ஏற்படுத்தி தாய்லாந்திற்கு சென்று விட்டாரே என அஞ்சுகிறோம். இது ஒரு தப்பிப்பா என்று தனிப்பட்ட முறையில் எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. அவரை உடனடியாக வரவழைத்து சட்டத்தை அமல்படுத்துமாறு சட்ட அமலாக்க முகாமைகளைக் கேட்டுக்கொள்கிறோம் என்றார் .
கல்வி அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தின் மீதான சைபர் தாக்குதல், உள்நாட்டு இணைய வலையமைப்பின் ஊடாக மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
சைபர் தாக்குதலை மேற்கொண்டது யார் என்பது தொடர்பில் அடையாளம் காண்பதற்காக இணைய சேவை வழங்குநர்களிடம் தகவல்கள் கோரப்பட்டுள்ளதாக இலங்கை கணினி திடீர் பதிலளித்தல் ஒன்றியத்தின் சிரேஷ்ட தகவல் பாதுகாப்பு பொறியியலாளர் சருக தமுனுபொல தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பான அனைத்து தகவல்களும் உள்ளடங்கிய அறிக்கையொன்று கல்வியமைச்சுக்கு இன்று(10) கையளிக்கப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
கடந்த வௌ்ளிக்கிழமை சைபர் தாக்குதலுக்கு இலக்கான கல்வி அமைச்சின் இணையத்தளமானது தொடர்ந்தும் செயலிழந்த நிலையிலேயே காணப்படுகின்றது.
ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் தலதா அத்துகோரள கட்சியின் அரசியல் செயற்பாடுகள் தொடர்பில் கடும் அதிருப்தி அடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தற்போது கட்சி நடத்தும் நிகழ்ச்சிகளில் கூட அவர் பங்கேற்பதில்லை என அக்கட்சியின் மூத்த பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
சஹாபாவும் ஐக்கிய தேசியக் கட்சியும் அரசியல் ரீதியாக ஒன்றிணைய வேண்டும் என்று உறுதியாக நம்பும் பாராளுமன்ற உறுப்பினர்களில் முன்னணியில் இருப்பவர்களில் இவரும் ஒருவர்.
பாராளுமன்ற உறுப்பினர் அண்மையில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இதனைத் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார்.
ஆனால் சஹாபா தலைவர்கள் அவருக்கு இதுவரை எந்த பதிலும் அளிக்கவில்லை என்பதும் தெரிந்ததே.
கடந்த கால் நூற்றாண்டுக்கும் மேலாக, உங்கள் மதிப்பை வென்ற வங்கியான SDB வங்கி, இலங்கையின் நிதித் துறையின் பொருளாதார உந்துசக்தியின் மூலக்கல்லாக திகழ்கின்றது. தனிநபர்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் ஆகிய இரு தரப்பினருக்குமான சேவைகளுடன், பாதுகாப்பான மற்றும் நம்பகமான வங்கித் தீர்வுகளை அது வழங்கி வருகிறது.
அந்த வகையில் தமிழ், சிங்கள புத்தாண்டின் கொண்டாட்ட உணர்வோடு இணைந்த ஒரு நடவடிக்கையாக, இலங்கையின் கலாசார கட்டமைப்பை ஆழமாக எதிரொலிக்கும் பிரச்சாரத்தை SDB வங்கி ஆரம்பித்துள்ளது. தேசம் ஒன்றிணைந்து நட்பைக் கொண்டாடும் இது தமிழ், சிங்கள புத்தாண்டு காலமாகும். இந்த முயற்சியின் சரியான பின்னணியாக மகிழ்ச்சி மற்றும் ஒற்றுமை செயற்படுகிறது. இந்த காலகட்டத்தில் அனைத்து சடங்குகளையும் தமிழ், சிங்கள சமூகங்கள் சுப நேரங்களின் அடிப்படையில் கொண்டாடுகிறார்கள் என்பது அனைவரும் அறிந்த உண்மை. அதற்கு அங்கீராமளிக்கும் வகையில், இது ஒரு தனித்துவமான நடவடிக்கையாக, "SDB இத்துறும் சாரித்ரய" (SDB சேமிப்பு சடங்கு) எனும் கருப்பொருளுடனான சேமிப்பு பாரம்பரியத்தை வங்கி அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த திட்டத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி, இது தொடர்பில் SDB வங்கியின் சந்தைப்படுத்தல் பிரிவின் தலைவர் ஹசித சமரசிங்க தெரிவிக்கையில், "SDB வங்கி ஆகிய நாம், சேமிப்புகள் எமது வாடிக்கையாளர்களுக்கு நிதி பாதுகாப்பின் அடித்தளமாக அமைகின்றன என்பதை நன்றாக புரிந்துகொண்டுள்ளோம். 'SDB இத்துறும் சாரித்ரய' என்பது ஒரு பிரசாரத்தையும் தாண்டிய ஒரு முக்கிய விடயமாகும். இந்த நெருக்கடிமிக்க காலத்தில், முக்கியமான சேமிப்பு கலாசாரத்தை மேம்படுத்துவதானது எமது அர்ப்பணிப்புக்கு ஒரு சான்றாகும். முற்போக்கான நபர்களுக்கான நிதிப் பங்காளியாக இருப்பதிலும், சிறந்த நிதி நடைமுறைகள் குறித்து அவர்களுக்கு தெளிவுபடுத்துவதிலும், தமது எதிர்காலத்திற்காக சேமிப்பதிலும் முதலீடு செய்வதிலும் ஒவ்வொரு இலங்கையருக்கும் வாய்ப்பு இருப்பதை உறுதி செய்வதில் நாம் எம்மை அர்ப்பணித்துள்ளோம்." என்றார்.
இந்த ஊக்குவிப்பு திட்டமானது, சேமிப்பின் பெறுமதியை வலுப்படுத்துவதற்கும் சமூகத்துடன் நீடித்த தொடர்பை ஏற்படுத்துவதற்குமாக முன்னெடுக்கப்படுகின்றது. புது வருடத்தின் உணர்வானது கொண்டாட்டம் மட்டுமல்லாது அனைத்து இலங்கையர்களுக்கும் பாதுகாப்பான நிதி தொடர்பான எதிர்காலத்தை கட்டியெழுப்புவதுமாகும் என்பதை உறுதிப்படுத்துகிறது.
SDB வங்கி பற்றி
எதிர்காலத்துடன் இணைந்து பயணிக்க தயாராக உள்ள SDB வங்கி, அதன் வாடிக்கையாளர்களுக்கு முழுமையான, 360 பாகையிலான ஆதரவை வழங்குகின்றது. SDB வங்கியானது, கொழும்பு பங்குச் சந்தையின் பிரதான சபையில் பட்டியலிடப்பட்டுள்ளதும் BB + பிட்ச் மதிப்பீட்டைக் கொண்ட, இலங்கை மத்திய வங்கியால் ஒழுங்குபடுத்தப்பட்ட அனுமதிப்பத்திரம் பெற்ற விசேட வங்கியாகும். நாடளாவிய ரீதியில் உள்ள 94 கிளை வலையமைப்பின் ஊடாக, நாடு முழுவதும் உள்ள அதன் சில்லறை வணிக, சிறிய, நடுத்தர தொழில்முயற்சியாளர்கள், கூட்டுறவு மற்றும் வணிக வங்கி வாடிக்கையாளர்களுக்கு விரிவான நிதிச் சேவைகளை வங்கி வழங்குகிறது.
SDB வங்கியின் நெறிமுறைகளில் ESG கொள்கைகள் ஆழமாகப் பதிந்துள்ளதோடு, நிலைபேறான நடைமுறைகள் மூலம் உள்ளூர் சமூகங்கள் மற்றும் வணிகங்களை மேம்படுத்துவதில் உறுதியான கவனத்தை அது செலுத்துகிறது. பெண்களை வலுவூட்டல் மற்றும் டிஜிட்டல் உள்ளீர்ப்பை ஊக்குவிப்பதில் முக்கியமான அர்ப்பணிப்பை வங்கி கொண்டுள்ளது.