தமிழ் சிங்கள புத்தாண்டு சம்பிரதாய கொடுக்கல்வாங்கல் நடவடிக்கைகளுக்கு புதியதொரு அர்த்தத்தை சேர்ப்பிக்கும் வகையில், மக்கள் வங்கி காலம் காலமாக பல்வேறு சலுகைகளை வழங்கி வந்துள்ளதுடன், இம்முறையும் புத்தாண்டு கொடுக்கல்வாங்கல் நடவடிக்கைகளை மேற்கொள்பவர்களுக்கு பல்வேறு பரிசுகளை ஏற்பாடு செய்துள்ளது.
மக்கள் வங்கியின் பிரதிப் பொது முகாமையாளர் (தனிநபர் வங்கிச்சேவை) திரு. ரீ.எம்.டபிள்யூ சந்திரகுமார அவர்கள் இது குறித்து கருத்து வெளியிடுகையில்,
“இலங்கையில் சாமானிய மக்களுக்கும் வங்கிச்சேவை வசதிகள் கிடைக்கப்பெறச் செய்தல் வேண்டும் என்ற நோக்கத்துடன் ஸ்தாபிக்கப்பட்டம மக்கள் வங்கி, ஆரம்பத்திலிருந்தே மக்களுடைய சிந்தனைகளையும், விழுமியங்களையும் மதித்து செயல்பட்டு வந்துள்ளது. இலங்கையில் பல்வேறு தேசிய இனங்கள், மதங்கள் மற்றும் கலாச்சாரங்களுடன் பின்னிப்பிணைந்துள்ள மக்கள் வங்கி, இலங்கையில் வங்கித்துறையில் தமிழ் சிங்கள புத்தாண்டு கொடுக்கல்வாங்கல் நடவடிக்கைகளை 1973 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தி, இதனை முதலில் அறிமுகப்படுத்திய வங்கியாக சாதனை படைத்தது.
அன்றுதொட்டு, ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக, ஆண்டுதோறும் மக்கள் வங்கி இந்த புத்தாண்டு சம்பிரதாயத்தை தவறாது முன்னெடுத்து வந்துள்ளது. புத்தாண்டு கொடுக்கல்வாங்கல் நடவடிக்கைகளுக்காக வங்கிக்கு வருகை தருகின்ற வாடிக்கையாளர்களுக்கு கவர்ச்சியான பல்வேறு பரிசுகளை அது தற்காலத்தில் வழங்கி வருகின்றது. வங்கிச்சேவையை ஊக்குவித்து, மக்கள் மத்தியில் சேமிக்கும் பழக்கத்தைத் தோற்றுவித்து, தேசிய அபிவிருத்திக்கு பங்களிப்பதில் முன்னின்று செயல்படுவதே வங்கியின் பிரதான நோக்கமாக உள்ளது,” என்று குறிப்பிட்டார்.
அவர் தொடர்ந்தும் கருத்து வெளியிடுகையில்,
“இந்த ஆண்டும், புத்தாண்டு சம்பிரதாய கொடுக்கல்வாங்கல் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வாய்ப்பினை மக்கள் வங்கி உங்களுக்கு வழங்குகின்றது. அதற்கமைவாக, மக்கள் வங்கிக் கிளைகள் அனைத்தும் ஏப்ரல் 15 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணிக்கு திறக்கப்படுவதுடன், மக்கள் வங்கியின் வாடிக்கையாளர்களும், மக்கள் வங்கியின் பணியாளர்களும் தமது பிள்ளைகள் மற்றும் குடும்ப அங்கத்தவர்களுடன் இணைந்து புத்தாண்டைக் கொண்டாட இடமளிக்கும். ரூபா 50,000 அல்லது அதற்கு மேற்பட்ட தொகையை வைப்பில் இடுகின்ற வாடிக்கையாளர்கள் மதிப்புமிக்க பித்தளை விளக்கொன்றை பரிசாகப் பெற்றுக்கொள்வர்.
இதை விட, ஒவ்வொரு கொடுக்கல்வாங்கல் நடவடிக்கைக்கும் நினைவுப் பரிசு வழங்கப்படவுள்ளதுடன், வருகை தருகின்ற வாடிக்கையாளர்களை மகிழ்விக்கும் வகையில், புத்தாண்டுக் கொண்டாட்டத்தின் அடையாளமாக பாற்சோறு மற்றும் பலகாரங்களும் பரிமாறப்படும். ஆகவே வழக்கம் போலவே புத்தாண்டு கொடுக்கல்வாங்கல் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக ஏப்ரல் 15 ஆம் திகதி மக்கள் வங்கிக் கிளைகளுக்கு வருகை தருமாறு உங்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்,” என்று குறிப்பிட்டார்.
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று (09) அதிகாலை தாய்லாந்துக்கு விஜயம் செய்ய நாட்டிலிருந்து புறப்பட்டுள்ளார்.
அவருடன் 9 பேர் கொண்ட குழுவும் பயணத்தில் இணைந்து கொண்டு இன்று அதிகாலை 12.55 மணியளவில் தாய்லாந்தின் பாங்காக் நகருக்கு புறப்பட்டனர்.
ராஜபக்ச குடும்பத்தினரால் இலங்கை திவாலான நாடாக மாற்றப்பட்டதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க தெரிவித்துள்ளார்.
மக்களிடமிருந்து திருடாமல் இருந்திருந்தால் நாடு திவாலாகியிருக்காது என்றும் அவர் கூறுகிறார்.
ராஜபக்ச குடும்பம் நாட்டை திவாலாக்கியது என்று நாட்டின் உச்ச நீதிமன்றமும் கூறியுள்ளதாக அவர் குறிப்பிடுகிறார்.
ஒருமுறை தோற்கடிக்கப்பட்டு பின்னர் அறுபத்தொன்பது இலட்சம் வாக்குகளைப் பெற்று ஆட்சிக்கு வந்த ராஜபக்ச குடும்பம் நாட்டை சீரழித்ததாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
இஸ்லாமிய பள்ளிவாயல்கள் தொடர்பில் சிறிலங்கா காவல்துறை, விசேட அதிரடிப்படை மற்றும் இராணுவத்தின் பாதுகாப்புப் படையினர் இணைந்து விசேட பாதுகாப்பு வேலைத்திட்டமொன்றை அமுல்படுத்துமாறு பொலிஸ் மா அதிபர் தேஷ்பந்து தென்னகோன் பணிப்புரை விடுத்துள்ளார்.
மத வழிபாடுகள் நடைபெறும் 2,453 இஸ்லாமிய பள்ளிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய 5,580 காவல்துறை அதிகாரிகளும் 510 சிறப்பு அதிரடிப்படை அதிகாரிகளும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
நாடு முழுவதும் உள்ள 3,203 இஸ்லாமிய பள்ளிகளில், 1,260 ராணுவ வீரர்களுடன் 7,350க்கும் மேற்பட்ட பாதுகாப்புப் படையினர் நிறுத்தப்பட்டுள்ளனர்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் புதிய பதில் தலைவராக நிமல் சிறிபால டி சில்வா நியமிக்கப்பட்டுள்ளார்.
கட்சியின் முன்னாள் தலைவி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க மற்றும் சிரேஷ்டர்கள் தலைமையில் அரசியல் பீட அவசரக் கூட்டம் இடம்பெற்றதுடன், இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
பதில் பொதுச் செயலாளர் பதவி துமிந்த திஸாநாயக்கவுக்கு வழங்கப்பட்டது.
சர்ச்சையை ஏற்படுத்திய இம்யூனோகுளோபுலின் சம்பவம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல மீண்டும் ஏப்ரல் 22ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
அவரும் சந்தேகநபர்களும் இன்று (08) மாளிகாகந்த நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
அங்கு முதலாம், இரண்டாவது, மூன்றாவது, நான்காவது, ஆறாவது, ஏழாவது மற்றும் எட்டாவது சந்தேகநபர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டு ஐந்தாவது சந்தேகநபர் பிணையில் விடுவிக்கப்பட்டதாக எமது நீதிமன்ற செய்தியாளர் குறிப்பிட்டார்.
அத்துடன், 10ஆம் மற்றும் 11ஆம் சந்தேக நபர்களை எதிர்வரும் 10ஆம் திகதி மீண்டும் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தி பிணை வழங்குவதா இல்லையா என்பதை தீர்மானிக்குமாறு நீதவான் உத்தரவிட்டிருந்தார்.
பாதுக்க, அங்கமுவ பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
பொலிஸ் விசேட அதிரடிப்படையினரும் பொலிஸாரும் இணைந்து மேற்கொண்ட நடவடிக்கையின் போது, பொலிஸாரின் வீதித் தடையை மீறிச் சென்ற மோட்டார் சைக்கிள் சாரதி பொலிஸாரை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்திய போதிலும், பொலிஸாருக்கு பதிலடி கொடுத்த மோட்டார் சைக்கிள் சாரதி படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் இலங்கை விமானப்படை வீரர் என அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், ஹொரண தல்கஹவில பிரதேசத்தில் நேற்று (07) இடம்பெற்ற இரட்டைக் கொலைச் சம்பவத்தில் குறித்த நபர் பிரதான சந்தேகநபர் என பொலிஸார் தெரிவித்தனர்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உபதலைவரான நிமல் சிறிபாத சில்வா அழைப்பில் இன்றைய தினம் (08) நடைபெறவுள்ள அரசியல் பீடக் கூட்டம் சட்டரீதியாக நடைபெறாது என கட்சியின் பதில் பொதுச் செயலாளர் சாரதி துஷ்மந்த அமைச்சருக்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளார்.
அரசியல்பீட கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கும் அதிகாரம் தலைவருக்கு மாத்திரமே உண்டு எனவும் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கட்சியின் தீர்மானத்தின் அடிப்படையில் சிரேஷ்ட உபதலைவர் பதவி இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் நீதிமன்றில் பெறப்பட்ட இடைக்கால உத்தரவின் அடிப்படையில் அமைச்சர் தற்போது அந்த பதவியில் இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
நேற்றிரவு மாவனல்லை பதியதொர பிரதேசத்தில் ஏற்பட்ட பிரச்சினையை தீர்க்க முற்பட்ட 53 வயதுடைய நபர் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்துள்ளார்.
பதியதொர பிரதேசத்தில் ஏற்பட்ட தகராறு தொடர்பில் மாவனெல்லை பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டு, நிலைமையை ஆராய்வதற்காக அதிகாரிகளை அனுப்பி வைத்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
விசாரணையில், தகராறில் ஈடுபட்ட ஒருவர், போலீஸ் அதிகாரி ஒருவரை கூரிய ஆயுதத்தால் தாக்கியதாக கூறப்படுகிறது.
பதிலுக்கு, மற்றொரு அதிகாரி, அமைதியை மீட்டெடுக்க எச்சரிக்கை துப்பாக்கிச் சூடு நடத்தினார். எவ்வாறாயினும், தாக்குதலாளி அதிகாரியைத் தாக்க முயற்சித்து அச்சுறுத்தலைத் தொடர்ந்தபோது, அதிகாரி மீண்டும் துப்பாக்கிச் சூடு நடத்தினார், இதன் விளைவாக வாக்குவாதத்தில் ஈடுபட்ட சந்தேக நபரின் தந்தை படுகாயமடைந்தார்.
சம்பவத்தில் படுகாயமடைந்த அப்பகுதியைச் சேர்ந்த நபரே மாவனெல்லை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார்.
காயமடைந்த இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் தற்போது அதே வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தாக்குதலுக்கு காரணமான சந்தேக நபர் அங்கிருந்து தப்பிச் சென்றதுடன், அவரைக் கைது செய்வதற்கான விசேட நடவடிக்கையை மாவனல்லை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சிக்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் இடையில் நிலவும் அரசியல் முரண்பாடுகள் காரணமாக எதிர்வரும் புத்தாண்டின் பின்னர் நாட்டில் பல அரசியல் குழப்பங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பசில் ராஜபக்ச தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன முதலில் பொதுத் தேர்தலை நடத்த விரும்பினாலும், முதலில் ஜனாதிபதி தேர்தலுக்கு தயாராகுமாறு ஜனாதிபதி அண்மையில் அமைச்சரவைக்கு அறிவித்திருந்தார்.
பொதுத் தேர்தலை முதலில் நடத்துவதற்கு ஜனாதிபதி இணங்கவில்லை என்றால், பொதுத் தேர்தலையும் ஜனாதிபதித் தேர்தலையும் ஒரே நேரத்தில் நடத்த வேண்டும் என ஜனாதிபதியிடம் முன்மொழிவதற்கு ஆளும் கட்சி உறுப்பினர்கள் குழு ஆலோசித்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பில், பொதுஜன பெரமுன கட்சியின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும், பசில் ராஜபக்ஷவும், அக்கட்சியின் முக்கியஸ்தர்களுடன் கலந்துரையாடவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
எதிர்வரும் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் இணைந்து பொதுஜன பெரமுன செயற்பட வேண்டுமென ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் அமைச்சரவை மற்றும் இராஜாங்க அமைச்சர் குழு கருத்து வெளியிட்டுள்ளது.
இதேவேளை, அமைச்சுப் பதவிகளை வகிக்காத பொதுஜன பெரமுன கட்சியின் உறுப்பினர்கள் குழுவொன்று, கட்சியின் வேலைத்திட்டத்தினால் ஏமாற்றமடைந்து, எதிர்காலத்தில் எதிர்க்கட்சியில் இணையத் தயாராக இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தற்போதைய ஜனாதிபதிக்கு ஆதரவளிப்பது தொடர்பில் எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் குழுவொன்று கலந்துரையாடலை ஆரம்பித்துள்ளதாகவும், அதற்காக ஐக்கிய தேசியக் கட்சியுடன் மீண்டும் இணைவதற்கு அவர்கள் தயாராக இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
சுதந்திரக் கட்சியின் பதவிகளில் இருந்து நீக்கப்பட்ட அமைச்சர் மஹிந்த அமரவீர உள்ளிட்டோர் பாராளுமன்ற உறுப்பினர் நிமல் லான்சா தலைமையிலான புதிய கூட்டணியில் இணைந்து ஜனாதிபதிக்கு தமது ஆதரவைத் தெரிவிக்கத் தயாராக இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.