web log free
June 06, 2025
kumar

kumar

இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் எரிபொருட்களின் விலைகளை திருத்துவதற்கு தீர்மானித்துள்ளது. 

மாதாந்த எரிபொருள் விலை சூத்திரத்தின் பிரகாரம் இந்த எரிபொருள் விலை திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்படி 355 ரூபாயாக காணப்பட்ட 92 ரக ஒக்டேன் பெற்றோல் லீற்றரின் விலை 11 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 344 ரூபாவாகும்.

420 ரூபாயாக நிலவிய ஒக்டேன் 95 ரக பெற்றோல் லீற்றரின் விலை 41 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 379ரூபாவாகும்.

377 ரூபாயக நிலவிய லங்கா சுப்பர் டீசல் 4 ஸ்டார் யூரோ 4 இன் லீற்றர் ஒன்றின் விலை 22 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 355 ரூபாவாகும்.

இதேவேளை, ஓட்டோ டீசல் மற்றும் மண்ணெண்ணெய் விலைகளில் திருத்தம் மேற்கொள்ளப்படவில்லை.

இதற்கமைய ஒட்டோ டீசல் லீற்றரின் விலை தொடர்ந்து 317 ரூபாவிற்கும் மண்ணெண்ணெய் லீற்றரின் விலை தொடர்ந்து 202 ரூபாவிற்கும் விற்பனை செய்யப்படவுள்ளது.

ஜனாதிபதி தேர்தல், பொதுத் தேர்தல் மற்றும் மாகாணசபை தேர்தல்கள் இந்த ஆண்டு மற்றும் அடுத்த ஆண்டில் நடத்தப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று(30) மீண்டும் வலியுறுத்தியுள்ளார். 

மாத்தறை கோட்டை மைதானத்தில் இடம்பெற்ற "ஒன்றாக வெல்வோம்" மக்கள் பேரணியில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார். 

இந்த பேரணியில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் கலந்துகொண்டிருந்தனர்.

மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர இந்த பேரணியை ஏற்பாடு செய்திருந்தார்.

சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திரவிடம் பேசவும், நலம் விசாரிப்பதற்காகவும் சிறைச்சாலைக்குச் செல்வதை ஐக்கிய மக்கள் சக்தி தவிர்த்து வருவதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

 கட்சியின் செயற்பாடுகளை முன்னெடுத்துச் செல்லும் போது பல்வேறு பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஆசன அமைப்பாளர்களுடன்  ஹிருணிகா பிரேமச்சந்திர முரண்பட்டமையினால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அறியமுடிகின்றது.

ஹிருணிகா பிரேமச்சந்திர தனக்காக மக்கள் ஆதரிக்காதமை குறித்து மிகவும் கவலையடைவதாக மேற்கண்ட வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.

சர்வதேச சமூகத்திடம், மலையக தமிழ் மக்களின் அரசியல் உரிமைகளை பெற்று தரும் பொறுப்பை நாம் ஒப்படைக்க போவதில்லை. எமக்கான அரசியலமைப்பு மற்றும் சட்ட ரீதியான உரிமைகளை பெறுவது, அரசியல் அமைப்பு திருத்தங்களை மேற்கொள்வது, அவற்றுக்காக பேரம் பேசுவது ஆகியவற்றை தேர்தல்களில் எமது மக்கள் வழங்கும் மக்கள் ஆணையினால் கிடைக்கும் எமது அரசியல் பலத்தை பயன்படுத்தி, தமிழ் முற்போக்கு கூட்டணி உள்நாட்டில் அரசியல் பேரங்களையும் ஜனநாயக போராடங்களையும் முன்னெடுத்து பெற்று கொள்ளும்.

நாம் பெறுகின்ற இந்த அரசியலமைப்பு மற்றும் சட்ட ரீதியாக உரிமைகளையும், அவற்றை பெற நாம் முன்னெடுக்கும் பயணத்தையும், மென் மேலும் செழுமை படுத்த அவசியமான அபிவிருத்தி, வளர்ச்சி திட்டங்கள், தொழில் நுட்பம், தகவல் மற்றும் உலகாளாவிய அனுபவ பகிர்வு ஆகிய உதவிகளையே அமெரிக்கா உட்பட சர்வதேச சமூகத்திடம் நாம் எதிர்பார்க்கின்றோம். எமது இந்த நிலைப்பாடு, எமக்கு மட்டும் சாதகமானது அல்ல, இந்தியா, அமெரிக்கா உட்பட சர்வதேச சமூகத்துக்கும் “தொல்லை இல்லாமல்” சாதகமானது  என நான் மிக தெளிவாக நேற்று அமெரிக்க தூதர் ஜூலி சாங் இடம் தெரிவித்தேன். அதையே நேற்று முன் தினம்  இலங்கைக்கான ஐநா வதிவிட பிரதிநிதி மார்க் அந்திரே இடமும் கூறினேன் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் கூறியுள்ளார். 

கடந்த சில தினங்களாக சர்வதேச சமூக பிரதிநிதிகளுடன் நடத்தி வரும்  சந்திப்புகள் பற்றி தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன், ஊடகங்களுக்கு கூறியுள்ளதாவது,

உலகம் இன்று மிக வேகமாக மாறி வருகிறது. உலக ஒழுங்கமைப்பு என்பது பலம் வாய்ந்த நாடுகளின் தேசிய நலன்களின் அடிப்படையிலேயே தீர்மானிக்க படுகிறது. எமது மக்களின் அரசியல் துன்பங்கள், துயரங்கள் பெரிய நாடுகளுக்கு பொருட்டாக தெரிவதில்லை. இலங்கை உட்பட ஆசிய, ஆபிரிக்க, இலத்தீன் அமெரிக்க நாடுகள் தொடர்பாக உலக ஒழுங்கமைப்பு பலம் வாய்ந்த நாடுகளால் தமது நலன்களின் அடிப்படையிலேயே தீர்மானிக்க படுகின்றன.

இந்நிலையில் நாம் உலக நாடுகளை அணுகி எமது அரசியல் போராட்டங்கள் தொடர்பில் கலந்துரையாடுவது நேரத்தை வீணடிக்கும் செயற்பாடாகும். இந்நாட்டு பிரதிநிதிகளும் இவற்றை பொறுமையாக கேட்கின்றார்களே தவிர எமக்காக அரசியல் போராட்டங்களை அவர்கள் முன்னெடுப்பது கிடையாது. உலக ஒழுங்கமைப்பு மிக வேகமாக இந்த நிலைலையை நோக்கி நகர்ந்து மாறி விட்டது.

ஆகவே, சர்வதேச சமூகத்திடம் எமது அரசியல் உரிமைகளை பெற்று தரும் பொறுப்பை நாம் ஒப்படைக்க போவதில்லை. ஆனால், அவர்கள் செய்ய கூடிய எம்மை நோக்கிய அவர்களின் பொறுப்புகள் சில உள்ளன. நாம் உள்நாட்டில் பெறுகின்ற அரசியலமைப்பு மற்றும் சட்ட ரீதியாக உரிமைகளையும், அவற்றை பெற நாம் முன்னெடுக்கும் பயணத்தையும், மென் மேலும் செழுமை படுத்தும், அபிவிருத்தி, வளர்ச்சி திட்டங்கள், தொழில் நுட்பம், தகவல் மற்றும் உலகாளாவிய அனுபவ பகிர்வு ஆகிய உதவிகளையே அமெரிக்கா உட்பட சர்வதேச சமூகத்திடம் நாம் எதிர்பார்க்கின்றோம். அவற்றை எப்படி பெற வேண்டும் என்பது எனக்கு தெரியும்.

எமக்கான அரசியலமைப்பு மற்றும் சட்ட ரீதியான உரிமைகளை பெறுவது, அரசியல் அமைப்பு திருத்தங்களை மேற்கொள்வது, ஆகியவற்றை மக்கள் ஆணையுடனான எமது அரசியல் பலத்தை பயன்படுத்தி, உள்நாட்டில் அரசியல் பேரங்களை முன்னெடுத்து பெற்று கொள்வோம். இதுவே எமக்கு சாத்தியமான கொள்கை ஆகும். அதற்கு உரிய அரசியல் பலத்தை தமிழ் முற்போக்கு கூட்டணிக்கு எமது மக்கள் வழங்கி உள்ளார்கள். எதிர்காலத்தில் மிக அதிகமாக வழங்குவார்கள் என்ற நம்பிக்கை எமக்கு உண்டு.

கூட்டணியின் தலைவர் என்ற முறையில் நான் ஒரு தூர பார்வையுடனேயே இதை கூறுகிறேன். எவ்வளவு அதிக வாக்குகள் எமக்கு கிடைகின்றனவோ,  அந்த அளவு எமது பலம் உயரும். எமது பலம், எந்த அளவு உயர்கின்றதோ, அந்த அளவு எமது அரசியல் பலத்தை பயன்படுத்தி, உள்நாட்டில் அரசியல் பேரங்களையும் ஜனநாயக போராடங்களையும் முன்னெடுத்து நாம் உரிமைகளை பெறுவோம்.

நாற்பது வருடங்களாக மலை நாட்டில், தென் இலங்கையில் குப்பை கொட்டிய பிற்போக்கு கும்பலை விட பல மடங்கு பணிகளை நாம் 2015-2019 வரையான நான்கே வருடங்களில் செய்து காட்டி உள்ளோம். எதிர்காலத்தில் மிக விரைவாக இன்னமும் பல காரியங்களை நாம் செய்ய உள்ளோம். மக்கள் பலமே எமக்கு வேண்டும். எம்மை எதிர்க்கும் உதிரிகளை தேர்தல்களில் தூக்கி வீசி, எமது பலத்தையும், ஆட்சியையும் நாம் நிலை நாட்டுவோம்.

ஐக்கிய தேசியக் கட்சியின் செயலாளர் நாயகம் பாலித ரங்கே பண்டாரவின் மகன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கருவலவஸ்வெவ பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்து தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளார்.

இன்று அதிகாலை அவர் பயணித்த கார் வீதியை விட்டு விலகி முச்சக்கர வண்டியுடன் மோதி விபத்துக்குள்ளானது.

விபத்தில் காயமடைந்த முச்சக்கர வண்டி சாரதி ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவரான சஜித் பிரேமதாச முன்னாள் ஜனாதிபதியின் மகனாக இல்லாவிட்டால் மட்டக்களப்பு நகர சபைக்குத் தெரிவு செய்யப்படுவதற்கு கூட தகுதியற்றவர் என தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுர திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

சஜித் பிரேமதாச ஜனாதிபதி வேட்பாளராகவும் எதிர்கட்சித் தலைவராகவும் இருப்பதற்கான ஒரே தகுதி அவர் ரணசிங்க பிரேமதாசவின் மகன் என்பது மட்டுமே என்றும் அவர் கூறினார்.

மட்டக்களப்பில் நடைபெற்ற ஆசிரியர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே திஸாநாயக்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இன்னும் சில மாதங்களில் தேர்தல் அறிவிக்கப்படவுள்ளதால், தேர்தலுக்கு தயாராகுமாறு தேர்தல்கள் ஆணைக்குழு தனது திணைக்களத்திற்கு அறிவித்துள்ளதாக அரசாங்க தகவல் பிரிவு அதிகாரி கங்கானி லியனகே தெரிவித்துள்ளார்.

அதன்படி 2024 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு திகதியை நிர்ணயித்தால் அதற்குத் தேவையான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளதாக அரசாங்க தகவல் பிரிவு அதிகாரி கங்கானி லியனகே தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் குறிப்பிட்ட காலத்திற்குள் கோரப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.

2024 ஜூன் மாதத்திற்கான அஸ்வசும நலன்புரிப் பலன் கொடுப்பனவுத் திட்டத்தின் கீழ் இடைநிலை மற்றும் விடுபட்ட வகையைச் சேர்ந்த பயனாளிகளுக்கு சிறப்புக் கொடுப்பனவுகளை வழங்குவதற்காக மொத்தம் 622,495 பயனாளிகளின் வங்கிக் கணக்குகளுக்கு 11.6 பில்லியன் ரூபாயை நலன்புரிப் பலன்கள் வாரியம் வெளியிட்டுள்ளது. .

இத்திட்டத்தின் முதல் கட்டமாக, 2023 ஜூலை முதல் 31. 03. 2024 வரை தகுதியான பயனாளிகளுக்கு தலா 5000 ரூபாயும், மாற்றுப் பிரிவின் கீழ் தகுதியான பயனாளிகளுக்கு தலா 2500 ரூபாயும் ஜூலை 2023 முதல் 31. 12. 2023 வரை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது.  

தற்போதைய பொருளாதார நிலைமையை கருத்திற்கொண்டு, அஸ்வசும நலன்புரி கொடுப்பனவு திட்டத்தின் கீழ் மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதிக்கப்படக்கூடிய பிரிவினருக்கு விசேட கொடுப்பனவுகளை செலுத்தும் காலத்தை இந்த வருடம் டிசம்பர் மாதம் வரை நீடிக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நலன்புரி நன்மைகள் சபைக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

அதன் கீழ், ஜூன் 2024 மாதத்திற்கான இடைநிலை மற்றும் ஆபத்தான பிரிவினருக்கு சிறப்பு கொடுப்பனவு வழங்கவும், ஜூலை 2024 முதல் டிசம்பர் 2024 வரை மட்டுமே அந்த இரண்டு பிரிவினருக்கும் மாதந்தோறும் 5000 ரூபாய் செலுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும், மிகவும் வறிய மற்றும் ஏழ்மையான பிரிவினருக்கு தற்போதுள்ள பணம் செலுத்தும் முறை தொடர்ந்து அமுல்படுத்தப்படும் என நலன்புரி நன்மைகள் சபையின் தலைவர்/ஆணையாளர் ஜெயந்த விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் 21 உறுப்பினர்களுக்கு அரசாங்கத்தின் பலம் வாய்ந்த ஒருவரின் தலையீட்டினால் மாதாந்தம் தலா இரண்டு இலட்சம் ரூபா கொடுப்பனவு வழங்கப்படுவதாக கட்சி வட்டாரத்தில் இருந்து தெரியவந்துள்ளது.

இந்த கொடுப்பனவுகள் வேறொரு கட்சியின் பலம் வாய்ந்த உறுப்பினர் ஒருவரின் தலையீட்டின் மூலம் வழங்கப்படும் என்று வட்டாரங்கள் தெரிவித்தன.

கொடுப்பனவு பெறும் குழுவில் இரண்டு பெண் பாராளுமன்ற உறுப்பினர்களும் உள்ளதாக தெரியவந்துள்ளது.

அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு ஆதரவைப் பெறுவதற்காகவே இந்த கொடுப்பனவு வழங்கப்படுவதாக அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவித்துள்ளன.

இது தொடர்பில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் ஒருவரிடம் வினவிய போது, தமக்கு அவ்வாறான தகவல் கிடைத்துள்ளதாகவும், அது தொடர்பில் ஆராய்ந்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திரவிற்கு 3 வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி அமல் ரணராஜாவினால் இன்று(28) இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

தெமட்டகொடையிலுள்ள வர்த்தக நிலையமொன்றில் தொழில் புரிந்த அமில பிரியங்க அமரசிங்க எனும் இளைஞர் 2015 ஆம் ஆண்டு டிசம்பர் 21 ஆம் திகதி ஹிருணிக்கா பிரேமச்சந்திரவின் பிரத்தியேக பாதுகாவலர்களுக்கு சொந்தமான டிபென்டரை பயன்படுத்தி கடத்திச் செல்லப்பட்டு தாக்கப்பட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. 

இந்த சம்பவம் தொடர்பில் ஹிருணிகா பிரேமச்சந்திர மற்றும் அவரது பிரத்தியேக பாதுகாவலர்கள் 8 பேருக்கு எதிராக சட்ட மாஅதிபரால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

பிரதிவாதிகள் 8 பேரும் குற்றத்தை ஒப்புக்கொண்டமையினால் அவர்களுக்கு எதிராக அபராதம் விதித்த மேல்நீதிமன்ற நீதிபதி ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனையை விதித்தார்.

இளைஞரை கடத்திச்சென்று தாக்குதல் நடத்துவதற்கு உடந்தையாக இருந்தமை உள்ளிட்ட 18 குற்றச்சாட்டுக்களில் ஹிருணிகா பிரேமச்சந்திர குற்றவாளியாக காணப்பட்ட நிலையில் அவருக்கு 03 வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd