web log free
March 28, 2024

அண்ணாத்த முதல் பார்வை!

ரஜினி நடிப்பில் கால் நூற்றாண்டுக்குப் பிறகு தீபாவளி தினத்தில் வெளியாகும் திரைப்படம் மற்றும் சிவா - ரஜினி கூட்டணி முதல் முறையாக இணைந்திருக்கும் திரைப்படம் என பல எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் அண்ணாத்த திரைப்படம் நேற்று திரைக்கு வந்துள்ளது. உலகம் முழுவதும் 3000-க்கும் அதிகமான திரையரங்குகளில் குறிப்பாக வெளிநாடுகளில் மட்டும் 1100 திரையரங்குகளில் வெளியாகி தமிழில் புதிய சாதனையை நிகழ்த்தி இருக்கும் அண்ணாத்த திரைப்படம் அதிகாலை சிறப்பு காட்சிகளுடன் கோலாகலமாக திரைக்கு வந்துள்ளது.

படத்தில் காளையன் கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார் ரஜினிகாந்த். தனக்கே உரிய பாணியில் காமெடி, ஆக்ஷன், சென்டிமென்ட் காட்சிகளில் அசத்தி இருக்கிறார். ஊர் மக்களுக்கு போராடுவது, தங்கை மீது பாசம் காட்டுவது, எதிரிகளை துவம்சம் செய்வது, நயன்தாராவுடன் ரொமான்ஸ் என்று திரையில் ஜொலிக்கிறார்.

ரஜினிக்கு அடுத்தப்படியாக கதையில் அதிக முக்கியதத்துவம் கீர்த்தி சுரேஷுக்கு வழங்கப்பட்டுள்ளது. படம் முழுக்க அழுதுகொண்டே இருக்கும் கதாபாத்திரம் என்பதால் அவரும் ஒரே மாதிரியான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். மேலும் நயன்தாரா, சூரி, பிரகாஷ்ராஜ், குஷ்பு, மீனா என படத்தில் அரை டஜனுக்கும் மேற்பட்ட நட்சத்திர பட்டாளங்கள் இருந்தாலும் கதாபாத்திரங்களில் வலு இல்லாததால் மனதில் தங்காமல் செல்கின்றனர்.

தஞ்சை மாவட்டம் சூரக்கோட்டை உள்ளிட்ட சுத்துப்பட்டு கிராமங்களின் ஊராட்சி மன்றத் தலைவராக இருக்கிறார் காளையன் (ரஜினிகாந்த்). அவரின் ஒரே தங்கை தங்க மீனாட்சி (கீர்த்தி சுரேஷ்). அவர் பிறக்கும்போதே அம்மா இறந்துவிடுவதால் அண்ணனாக, தாயாக, எல்லாமுமாகவும் இருந்து உயிருக்கு உயிராக வளர்க்கிறார் காளையன். அடிக்கடி சண்டை போட்டு வம்பு வளர்க்கும் தன் எதிரி பிரகாஷ்ராஜ் மனம் திருந்தி வந்து தம்பிக்கு சம்பந்தம் பேச, தங்கையை மணம் முடித்துக் கொடுக்கச் சம்மதிக்கிறார் காளையன். ஊரே திருவிழாக் கொண்டாட்டத்தில் திளைக்க, தங்க மீனாட்சி திடீரென்று காணாமல் போகிறார். அண்ணன் காளையன் செய்வதறியாது கலங்கி நிற்கிறார்.

கீர்த்தி சுரேஷ், காதலனுடன் வீட்டை விட்டு வெளியேறி, திருமணம் செய்துகொண்டு கொல்கத்தாவுக்குச் சென்றுவிடுகிறார்.ஆனால் அதில் நடந்த குழப்பத்தை புரிந்துகொள்ளும் ரஜினி, கொல்கத்தா சென்று தங்கை கீர்த்தி சுரேஷின் திருமண வாழ்க்கையில் இருக்கும் ​​நிறைய பிரச்சனைகளை மறைமுகமாக எதிர்கொள்கிறார். ஒரு அண்ணனாக, ‘காளையன்’ ரஜினி எப்படி தன் தங்கையை ஆபத்தில் இருந்து காக்கிறார் என்பதுதான் ‘அண்ணாத்த’.

ரஜினியின் உற்சாகமும், பேச்சும் இப்போதும் அசரடிக்கிறது. நடனம், ஆக்‌ஷன் காட்சிகளில் பரபரக்கும்போது மட்டும் கொஞ்சம் சிரமப்படுகிறார். முதிர்ச்சியும், களைப்பும் அப்பட்டமாகத் தெரிகிறது. தங்கை மீதான பாசத்தையும், சொந்தங்கள் மீதான பற்றையும், ஊர் மக்கள் மீதான மரியாதையையும், நயன்தாரா மீதான காதலையும் வெளிப்படுத்தும்போது எனர்ஜியில் சளைக்காத மனிதராகத் தெரிகிறார். ஒவ்வொரு காரணத்தையும், ஒப்பீட்டையும் சொல்லி வசனம் பேசுவது அரதப் பழசான ஸ்டைல்தான் என்றாலும் ரஜினி பேசும் விதம் அழகு. தங்கை என்பவர் உறவுக்கும் மேலான உயிர் என்று பேசும் ரஜினி, தங்கையை உறவினர்கள் தூற்றும்போதும், மோசமான முடிவை நோக்கித் தள்ளும்போதும் என் தங்கச்சி என்று ரஜினி அளவாக நிறுத்திக்கொள்வதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

ரஜினியைத் தாண்டி படத்தில் ஸ்கோர் செய்வது கீர்த்தி சுரேஷ்தான். கம்பெனி சிஇஓ ஆனாலும் அப்பாவித் தங்கையாக, கண்ணீரும் கம்பலையுமாக பாத்திர வடிவமைப்புக்கு நியாயம் செய்திருக்கிறார். பாவப்பட்ட பெண் என்கிற பிம்பத்தை வரவழைத்து பரிதாபத்தை அள்ளிச் செல்கிறார். நயன்தாராவுக்கு வழக்கமும் பழக்கமுமான கதாபாத்திரம்தான். அது உறுதுணைக் கதாபாத்திரமாகவே அமைந்து விடுவதுதான் சோகம்.

வெற்றி பழனிச்சாமி திருவிழாக் கூட்டத்தை தன் கேமராவில் அடக்கியுள்ளார். இமானின் இசையில் அண்ணாத்த, சார சாரக் காற்றே, வா சாமி பாடல்கள் ரசிக்க வைக்கின்றன. பின்னணி இசையில்தான் இரைச்சலைக் கூட்டி இம்சிக்கிறார். ஆண்டனி எல்.ரூபன் இன்னும் கொஞ்சம் கத்தரி போட்டிருக்கலாம். தொழில்நுட்ப அம்சங்கள் போதுமான அளவுக்கு பலம் அளிக்கவில்லை.

கொல்கத்தாவுக்கு ரஜினி சென்று ஒரே பிரச்சினையில் தலைநகரே ஸ்தம்பித்துத் திரும்பிப் பார்க்கும் அளவுக்கு வளர்வதாகக் காட்டுவதெல்லாம் காதில் பூந்தோட்டத்தைச் சுற்றும் வேலை. எந்த லாஜிக்கும் இல்லாமல் ரஜினி மேஜிக் போதும், ரசிகர்கள் திருப்தி அடைந்துவிடுவார்கள் என்று சிவா நம்ப வைக்கப் போராடியிருக்கிறார். அந்தப் போராட்டத்தில் காயங்கள் ரசிகர்களுக்கே கிடைத்துள்ளன.

மொத்தத்தில், ரஜினியின் இந்த 'அண்ணாத்த' குடும்ப ரசிகர்களின் அபிமானமாக படமாக அமைந்தாலும் தமிழ் சினிமாவிற்கு ஆரோக்கியமான படமாக அமையவில்லை என்றே சொல்ல வேண்டும்.

Last modified on Friday, 05 November 2021 08:56