சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட டெங்கு தடுப்பூசியை பயன்படுத்துவதன் மூலம் இலங்கையில் டெங்கு நோய் பரவலை குறிப்பிடத்தக்க அளவில் குறைக்க முடியும் என நீர்கொழும்பு டெங்கு மற்றும் டெங்கு இரத்தக்கசிவு காய்ச்சல் மருத்துவ மேலாண்மை மையத்தின் நிறுவனர் மற்றும் மருத்துவத் தலைவர், லக்குமார் பெனாண்டோ தெரிவித்தார்.
குறிப்பாக, டெங்கு வைரஸின் இரண்டாவது வகையான DENV-2-க்கு எதிராக இந்த தடுப்பூசி 90 சதவீதத்திற்கும் அதிகமான செயல்திறனை வெளிப்படுத்துவதாக அவர் கூறினார்.
இந்த தடுப்பூசியை உருவாக்கிய ஆராய்ச்சி பணிகளிலும் தாம் பங்கேற்றிருந்ததால், அது இலங்கையில் அறிமுகப்படுத்தப்படுவதை எதிர்பார்த்து இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
தற்போது சுமார் 41 நாடுகளில் பயன்படுத்தப்பட்டு வரும் இந்த சர்வதேச அங்கீகாரம் பெற்ற டெங்கு தடுப்பூசியை இலங்கையில் அறிமுகப்படுத்த அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாக சுகாதார அமைச்சர் நலிந்த ஜெயதிஸ்ஸ அண்மையில் தெரிவித்திருந்தார். அதனைத் தொடர்ந்து மருத்துவர் லக்குமார் பெர்னாண்டோ இந்தக் கருத்தை வெளியிட்டார்.
மேலும், அறிவியல் ரீதியாக பயனுள்ளதாக நிரூபிக்கப்பட்ட வோல்பாக்கியா (Wolbachia) கொசு கட்டுப்பாட்டு முறையையும் இலங்கையில் அறிமுகப்படுத்த அரசாங்கம் பரிசீலித்து வருகிறது.
“தடுப்பூசி மட்டுமே டெங்கு நோயை முழுமையாக ஒழிக்க முடியாது. அது ஒரே தீர்வும் அல்ல. ஆனால் டெங்கு நோயால் ஏற்படும் பாதிப்புகளையும் சிக்கல்களையும் பெருமளவில் குறைக்க உதவும் மிகவும் பயனுள்ள வழிமுறையாக இது அமையும்,” என்று மருத்துவர் லக்குமார் பெர்னாண்டோ தெரிவித்தார்.




