ஓய்வூதியத்திற்கு தகுதி இல்லாத தனியார் மற்றும் அரைஅரசுத் துறைகளில் பணியாற்றும் ஊழியர்களின் சமூகப் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில் அறிமுகப்படுத்தப்பட்ட 1958ஆம் ஆண்டின் 15ஆம் இலக்க ஊழியர் சேமலாப நிதி (EPF) சட்டத்தை திருத்த அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
தற்போது, இச்சட்டத்திற்கான பொது நிர்வாக நடவடிக்கைகள் தொழிலாளர் ஆணையாளர் நாயகத்தின் கீழ் முன்னெடுக்கப்படுகின்றன. அதேவேளை, இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபை, ஊழியர் சேமலாப நிதியின் அறங்காவலராக செயல்பட்டு வருகிறது.
இதுவரை சட்டத்தின் சில பிரிவுகள் காலத்திற்கேற்ப திருத்தப்பட்டிருந்தாலும், தற்போதைய சமூக, பொருளாதார மற்றும் தொழில்நுட்ப மாற்றங்களுக்கு ஏற்ப உறுப்பினர்கள் எதிர்நோக்கும் சிக்கல்களை குறைத்து, மேலும் தரமானதும் திறமையானதுமான சேவையை வழங்கும் வகையில் சட்டத்தை மேலும் திருத்த வேண்டிய அவசியம் அடையாளம் காணப்பட்டுள்ளது.
இதற்கமைய, இலங்கை மத்திய வங்கி முன்வைத்த பரிந்துரைகளையும் கருத்தில் கொண்டு, தொழிலாளர் திணைக்களம் ஆரம்ப சட்ட வரைவை தயாரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அந்த ஆரம்ப வரைவை அடிப்படையாகக் கொண்டு, ஊழியர் சேமலாப நிதி (EPF) சட்டத்தைத் திருத்தும் சட்டமூலத்தை தயாரிக்க சட்ட வரைவு தயாரிப்பாளருக்கு ஆலோசனை வழங்குவதற்காக தொழிலாளர் அமைச்சர் முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.




