நாட்டின் எதிர்கால சந்ததியினர் மற்றும் தற்போதைய சிறைச்சாலைகளில் நிலவும் நிலைமை குறித்து மக்கள் விடுதலை முன்னணியின் பிரதான செயலாளர் டில்வின் சில்வா அண்மையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கருத்துத் தெரிவித்துள்ளார்.
நல்லதொரு எதிர்கால சந்ததியை உருவாக்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அவர் தெரிவித்தார்.
சிறைச்சாலைகளை மூடக்கூடிய தலைமுறையை உருவாக்க வேண்டும் என்றும், புதிதாக சிறைச்சாலைகளை கட்ட வேண்டிய நிலையை ஏற்படுத்தும் தலைமுறையாக இருக்கக்கூடாது என்றும் அவர் குறிப்பிட்டார்.
இதன்போது மேலும் கருத்து தெரிவித்த மக்கள் விடுதலை முன்னணியின் பிரதான செயலாளர் டில்வின் சில்வா கூறியதாவது:
“இந்த நாட்களில் சிறைச்சாலைகளிலும் பிரச்சினைகள் உள்ளன. எல்லா இடங்களிலும் பிரச்சினைகள் இருக்கின்றன. சிறைச்சாலைகளில் கைதிகளின் எண்ணிக்கை அதிகரிப்பதும் ஒரு பிரச்சினையாக உள்ளது. அதேபோன்று சிறைச்சாலைகளில் நெரிசல் அதிகரிப்பதும் ஒரு பிரச்சினையாகும்.
எனவே, இந்த நிலைமை அதிகரிப்பது தனிப்பட்ட நபர்களின் தவறுகளால் மட்டுமல்ல. சமூகத்திற்குள் காணப்படும் ஒரு பெரிய பிரச்சினையும் இதற்குப் பின்னணியில் உள்ளது.
மக்கள் குற்றச் செயல்களில் அதிகளவில் ஈடுபடும் நிலையை மாற்ற வேண்டும். அதற்காக எமது பிள்ளைகளை குற்றச் செயல்களின் பக்கம் அல்லாமல், நாட்டை கட்டியெழுப்பும் நல்ல பாதையை நோக்கி வழிநடத்த வேண்டும்.
இதற்கு கல்வி மிகவும் முக்கியமானதாகும். அதேபோன்று பிள்ளைகள் தலைமைத்துவத்தை தமது கைகளில் எடுத்துக்கொள்ள வேண்டும்.”




