–சாம்பிக்க ரணவக்க குற்றச்சாட்டு
நிலக்கரி ஏற்றிச் செல்லும் 30 கப்பல்களை கொள்வனவு செய்தபோது இடம்பெற்றதாகக் கூறப்படும் பாரிய மோசடியில் ஜனாதிபதிக்கு தொடர்பு இருப்பதை நிரூபிப்பதற்கான போதுமான ஆதாரங்கள் தம்மிடம் இருப்பதாக முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
இணைய ஊடகமொன்றில் இடம்பெற்ற கலந்துரையாடலில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவிடம் தாம் இரண்டு முறைப்பாடுகளை முன்வைத்துள்ளதாகவும் ரணவக்க தெரிவித்துள்ளார்.
அவற்றில் முதலாவது முறைப்பாடு மக்கள் விடுதலை முன்னணியின் பிரதான செயலாளர் டில்வின் சில்வாவுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
“தங்களுடையவர்களை விடுவித்துக்கொள்ளவும், பழையவர்களுக்கு தண்டனை வழங்கவும்” ஆணைக்குழு நியமிக்கப்பட்டுள்ளதாக டில்வின் சில்வா தெரிவித்திருந்த கருத்து, அந்த ஆணைக்குழுவின் சுயாதீனத்தன்மைக்கு பாதிப்பை ஏற்படுத்துவதாக தாம் சுட்டிக்காட்டியுள்ளதாகவும் ரணவக்க தெரிவித்துள்ளார்.
இரண்டாவது முறைப்பாட்டில், நிலக்கரி ஏற்றிச் செல்லும் 30 கப்பல்களை மோசடியான முறையில் கொள்வனவு செய்தமை தொடர்பாக ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் மற்றும் தகவல்களை முன்வைத்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.
இந்த நடவடிக்கையால் நாட்டுக்கும் பொருளாதாரத்துக்கும் ஏற்பட்ட பாரிய இழப்பு மற்றும் மின்வெட்டுக்கு காரணமாக அமைந்த விடயங்கள் தொடர்பான விஞ்ஞான ரீதியான மற்றும் ஏனைய ஆதாரங்களை ஆணைக்குழுவின் முன்னிலையில் சமர்ப்பித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
“இது தொடர்பாக நான் பொலிஸாரிடமும் வாக்குமூலம் வழங்கியுள்ளேன். இது வெறுமனே வதந்தி அல்ல; விஞ்ஞான ரீதியான தகவல்கள் மற்றும் ஆதாரங்களைக் கொண்ட முறைப்பாடாகும். ஆணைக்குழுவின் ஆறு மாத காலம் நிறைவடைந்து, அதன் அறிக்கை வெளியிடப்படும் வரை நான் காத்திருக்கிறேன். அதன் பின்னர் என்னிடம் உள்ள அனைத்து ஆதாரங்களையும் ஆவணங்களையும் பொதுமக்கள் முன்னிலையில் வெளியிட நான் தயாராக இருக்கிறேன்” என பாட்டலி சம்பிக்க ரணவக்க மேலும் தெரிவித்துள்ளார்.




