– நிபுணர்கள் எச்சரிக்கை
தற்போது நிலவும் அதிக வெப்பமான காலநிலையுடன், மனநலப் பிரச்சினைகளால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக மனநல மருத்துவ நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். குறிப்பாக, வெப்பநிலை அதிகரிப்புடன் மனச்சோர்வு, பதற்றம் போன்ற அறிகுறிகளும் அதிகமாகக் காணப்படுவதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
மனநலம் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளிலும், தொடர்ந்து அதிக வெப்பத்திற்கு உட்படுவதால் மனிதர்களிடையே கோபம் மற்றும் எரிச்சல் அதிகரிக்கக்கூடும் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.
அதேபோன்று, வாகனம் ஓட்டும்போதும், பாதசாரிகளாக பயணிக்கும்போதும் ஏற்படும் பல்வேறு மோதல்கள் மற்றும் கருத்து முரண்பாடுகளின்போது, அதிக வெப்பநிலை காரணமாக கடுமையான கோபம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகரிப்பதாக ஆய்வுகள் தெரிவிப்பதாக மனநல மருத்துவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
மேலும், வாகன விபத்து ஏற்படும் சூழ்நிலையில் பிரேக் அழுத்துவதற்கு எடுத்துக்கொள்ளப்படும் எதிர்வினை நேரமும், சாதாரண காலநிலையுடன் ஒப்பிடும்போது அதிக வெப்பமான காலநிலையில் மாறுபடக்கூடும் என்பது ஆய்வுத் தரவுகள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அதுமட்டுமின்றி, குழந்தைகள் அதிக வெப்பத்திற்கு தொடர்ந்து வெளிப்படுவதால் கல்வி நடவடிக்கைகளில் கவனம் செலுத்துவதில் சிரமம் ஏற்படுவதுடன், நினைவாற்றலும் பாதிக்கப்படலாம் என மனநல மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும், அதிக வெப்பநிலை குடும்பத் தகராறுகள் அதிகரிப்பதற்கும், குடும்ப வன்முறை ஏற்படுவதற்கும் கூட காரணமாக அமையக்கூடும் என மனநல மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.




