எரிபொருள் இறக்குமதிக்கான தற்போதைய செலவுகளை மறுபரிசீலனை செய்த பின்னர், புதிய மானியங்களை வழங்குவது அல்லது எரிபொருள் விலைகளை திருத்துவது உள்ளிட்ட மாற்று நடவடிக்கைகளை பரிந்துரைக்குமாறு அரசாங்கத்திடம் கோருவதற்கு எரிசக்தி அமைச்சு திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பாக எரிசக்தி அமைச்சர் அனுர கருணாதிலக்க தென்னிலங்கை ஊடக நிறுவனமொன்றுக்கு கருத்து தெரிவித்துள்ளார்.
உலக சந்தையில் பெட்ரோல், டீசல் மற்றும் கச்சா எண்ணெயின் விலைகள் எரிபொருள் இறக்குமதி செலவில் நேரடியாக தாக்கத்தை ஏற்படுத்துவதால், அடுத்த இரண்டு வாரங்களில் இது தொடர்பில் ஆய்வொன்றை மேற்கொள்ள வேண்டியுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இந்த ஆய்வின் பின்னர், முன்னதாக அரசாங்கத்தினால் வழங்கப்பட்டு பின்னர் இடைநிறுத்தப்பட்ட 1500 கோடி ரூபாய் எரிபொருள் மானியத்தை மீண்டும் வழங்குவது அல்லது ஏற்பட்டுள்ள நட்டத்தை ஈடுசெய்வதற்காக எரிபொருள் விலைகளை திருத்துவது உள்ளிட்ட மாற்று நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
கடைசியாக மாதாந்த எரிபொருள் விலை திருத்தம் ஜூன் மாதத்தில் மேற்கொள்ளப்பட்டு, அது ஜூலை மாதம் முதல் நடைமுறைப்படுத்தப்பட்டதாகவும், இந்த மாதத்தில் இதுவரை எரிபொருள் விலை திருத்தம் மேற்கொள்ளப்படவில்லை என்றும் அமைச்சர் விளக்கியுள்ளார்.
இதற்கிடையில், மத்திய கிழக்கு போர் ஆரம்பமான பெப்ரவரி மாதம் முதல் எரிபொருள் விலைகள் 48 சதவீதத்தால் அதிகரித்துள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஜனக ராஜகருணா தெரிவித்துள்ளார்.
குறிப்பாக, தற்போது டீசல் விலை அதிகரித்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
காப்புறுதி கட்டணங்கள் மற்றும் போக்குவரத்து செலவுகளும் அதிகரித்துள்ளதாக குறிப்பிட்ட அவர், இந்தியா, சிங்கப்பூர் மற்றும் தென் கொரியா போன்ற நாடுகளில் இருந்து எரிபொருள் கொள்வனவு செய்யப்பட்டாலும், தற்போதைய விலை அதிகரிப்பு கவலைக்குரிய விடயமாக உள்ளதாக மேலும் தெரிவித்துள்ளார்.




