நீதித்துறை சீர்திருத்தங்கள் தொடர்பாக தேவையேற்பட்டால் மக்கள் வாக்கெடுப்பை நடத்துவதற்கு அரசாங்கம் தயாராக இருப்பதாக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
இந்த நீதித்துறை சீர்திருத்தத்தின் முக்கிய நோக்கம், 25 அல்லது 30 ஆண்டுகளாக விசாரணை செய்யப்பட்டு வரும் வழக்குகளால் பாதிக்கப்பட்டுள்ள மக்களை அந்த நிலைமையிலிருந்து விடுவித்து, விரைவாக நீதியை வழங்குவதுடன், மக்களுக்கு நம்பிக்கையான எதிர்காலத்தை உருவாக்குவதாகும் என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த சீர்திருத்த நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறியதாவது:
“செப்டம்பர் இறுதியில் அல்லது ஒக்டோபர் மாதமளவில், உச்ச நீதிமன்றத்தின் கருத்துப்படி நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை தேவைப்பட்டால், மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெறுவோம். அதற்கு மேலதிகமாக மக்கள் வாக்கெடுப்பு தேவைப்பட்டால், அதற்கும் செல்வோம். அதற்கேற்ப நடவடிக்கை எடுக்க நாங்கள் தயாராக இருக்கிறோம்.
இது மக்களுக்காக கொண்டுவரப்பட்ட சீர்திருத்தம் என்பதால், மக்களுக்காக மேற்கொள்ளப்படும் இந்த சீர்திருத்தத்தை நிச்சயமாக முன்னோக்கிக் கொண்டு செல்வோம்.”




