முன்னாள் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 21 பேரிடமிருந்து வசூலிக்கப்பட வேண்டிய 17 இலட்சத்து 93 ஆயிரத்து 480 ரூபாய் (ரூ. 1,793,480) நிலுவை வீட்டு வாடகையை இதுவரை வசூலிக்க நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்பது தெரியவந்துள்ளது.
இந்த நிலுவை வீட்டு வாடகைத் தொகைகள் 2015 முதல் 2020 வரையிலான காலப்பகுதியைச் சேர்ந்தவை எனவும் தெரியவந்துள்ளது. அதேவேளை, 2009 முதல் 2016 வரையிலான காலப்பகுதியில் ஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவின் அதிகாரிகளுக்கு வழங்குவதற்காக ஜனாதிபதி செயலகத்திடம் ஒப்படைக்கப்பட்டிருந்த கொழும்பு 05, கெப்பெட்டிபொல மாவத்தையில் அமைந்துள்ள 08 சம்மேளன இல்லங்களுக்கான வாடகைத் தொகைகளையும் வசூலிக்க நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
மேலும், 22 சம்மேளன இல்லங்களுக்கான 2012 முதல் 2024 வரையிலான காலப்பகுதியில் வசூலிக்கப்படாமல் நிலுவையில் உள்ள வாடகைத் தொகை 1,673,190 ரூபாய் எனவும், ஜயவடனகமவில் உள்ள 15 வீடுகளுக்கான 2012 முதல் 2016 வரையிலான காலப்பகுதியில் வசூலிக்கப்பட வேண்டிய நிலுவை வாடகைத் தொகை 8,449,265 ரூபாய் எனவும் தெரியவந்துள்ளது.
பொது நிர்வாக அமைச்சு தொடர்பாக 2025ஆம் ஆண்டுக்காக வெளியிடப்பட்டுள்ள வருடாந்த செயல்திறன் அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ள கணக்காய்வு அறிக்கையின் மூலம் இந்தத் தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.




